புதன், 19 அக்டோபர், 2022

அவமானப்படுத்த நினைப்பவர்களை என்ன செய்வது Zen Story


முன்னுரை:

இந்த உலகில் எங்கு சென்றாலும் நம்மை அவமானப்படுத்துவதற்கென்றே ஒருசிலர் இருப்பது இன்றைய சமயத்தில் மிக சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அவற்றிற்கு யாரும் விதிவிலக்கும் கிடையாது.இப்படி எங்கு சென்றாலும் நம்மை அவமானப்படுத்தவோ அல்லது நம் உணர்வோடு விளையாடவோ பல்வேறு மனிதர்கள் நம்மைச் சுற்றி வலம்வந்துகொண்டே இருக்கின்றனர். அப்படி வேண்டுமென்றே நம்மை வெறுப்பூட்ட நினைக்கும் ஒருவரை நாம் பெறும்பாலும் அடித்தோ அல்லது அவரைவிட மிக மோசமாகவோ நடந்து அவரிடமிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிசெய்வோம்.ஆனால் வேண்டு மென்றே நம்மை அவமானப்படுத்த நினைக்கும் ஒருவரை எவ்வாறு கையாளுவது என்பதை முற்கால துறவி ஒருவர் கற்றுக்கொடுத்துவிட்டு சென்றிருப்பதை நம்மால் காணமுடிகிறது.அவற்றை நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்துக்கொண்டால் நம் வாழ்விற்கும் மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அதனை இங்கு நான் பதிவுசெய்கின்றேன்.

துறவியின் கதை:

"அந்த நாட்டிலேயே மிகவும் அமைதியானவர் என்ற பெயரை அத்துறவி எடுத்திருந்தார்.மக்காளால் மிகவும் புகழப்பட்டுக் கொண்டிருந்த அத்துறவியின் மீது ஒருவனுக்கு பொறாமை வந்தது.அவர் எப்படி மக்களிலேயே மிகவும் நல்லவர் என்றும் மிக அமைதியானவர் என்றும் பெயர் பெற்றார்..?அவரை சும்மா விடக்கூடாது என்றும் அவரை நாம் எரிச்சலூட்டினால் நிச்சயம் அவர் உண்மை ரூபம் மக்களுக்கு  வெளிப்பட்டுவிடும் என்றும் எண்ணிக்கொண்டு அத்துறவியின் பெயரை கெடுப்பதற்காகவே அவருடைய மடத்திற்கு வந்தான்.

சீடர்களோடு உரையாடிக்கொண்டிருந்த துறவியை பார்த்து மிக மோசமான வார்த்தைகளால் திட்டினான்.ஆனால் துறவி அவனுடைய வார்த்தைகளை காதிலேயே எடுத்துகொள்ளவில்லை.பிறகு துறவியை நேராக பார்த்து அடே கிழவா,அசிங்கம் பிடித்தவனே,முட்டாளே இங்கே வாடா என்றான்.மாணவர்கள் அனைவரும் கோபமுற்று எழுந்தார்கள்.ஆனால் அத்துறவியோ அமைதியாக அமருங்கள் என்று கூறிவிட்டு வெளியில் வந்து "ஏனெப்பா ஏன் இப்படி தொண்டை வலிக்க கத்துகின்றாய்..?இதோ இந்த தண்ணீரை அருந்து என்று துறவி சாந்தமாக தன் கையிலிருந்த குவளையை கொடுத்தார்.ஆனால் அவன் அதனை வாங்கி தூக்கி எறிந்துவிட்டு  நான் உன்னை இவ்வளவு கேவலமாக திட்டுகின்றேனே உனக்கு சுரனையே இல்லையா..?என்று துறவியைப்பார்த்து கேட்டான்.

அதற்கு அத்துறவியோ புன்னகைத்துக் கொண்டே " நாம் ஒருவருக்கு வழங்கும் பரிசை அவர் பெற்றுக்கொண்டால் தானே அது அவருக்கு சொந்தம்..!அதை அவர் பெற்றுக்கொள்ளவில்லையானால் அது அந்த பரிசளித்தவருக்கே சொந்தமாகிவிடுமல்லவா என்று  அவனைப்பார்த்துக்கேட்டார்.வாலிபனோ சொல்வதறியாமல் நின்றான்..!நிலைதடுமாறிய அவ்வாலிபனை தோளில் தட்டிக் கொடுத்து வாலிபனே என்னை நான் யாரென்று உன்னைக்காட்டிலும் அறிவேன் எனவே என்னை திட்டுவதில் உன் பொன்னான சக்தியை வீணடிக்காதே என்று உபதேசித்தார்.அவ்வாலிபனும் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு துறவியிடம் மன்னிப்பு வேண்டினான்.மேலும் அத்துறவியிடமே சீடனாகவும் ஆனான் என்றும் அக்கதை முடிகின்றது.

நீதி:

  • இங்கு பலரும் நம்முடைய பொறுமையை சோதிப்பதற்கென்றே திரிகிறார்கள் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்.
  • நம்மை அவமானப்படுத்துவதையே குறிக்கோளாக கொண்டு நம்மை திட்டுபவர்களுக்கு நாம் எந்த பதிலும் அளிக்கத்தேவையில்லை.ஏனெனில் நாம் பதிலளிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் அற்ப ஆசையாக இருக்கும்.எனவே அத்தவறை நாமும் செய்துவிடக்கூடாது.
  •  நாம் நம்மைபற்றி நன்றாக அறிந்து வைத்திருக்கும்பொழுது நம்மை தாழ்த்த நினைப்பவர்களிடம் சென்று நம்மை உயர்த்திக்காட்ட எந்த அவசியமுமில்லை.அவர்களுக்கு விளக்கமளிப்பதைவிட விலக்கி வைப்பதே மேலானது.
  • நம்மை வெறுப்பூட்ட நினைப்பவர்களையும் மனிதர்களாக மதித்து செயல்பட வேண்டும்.

புதன், 29 ஜூன், 2022

உறக்கமும் உடல் ஆரோக்கியமும்-healthy-sleeping


உறக்கம் ஒரு உன்னத செயல்.

இந்த உலகை சம்பாரிப்பதற்காக ஓடும் பலரும் உறக்கம் என்பது நம் உடலை செயலற்ற நிலைக்குத் தள்ளும் தேவையற்ற ஒன்று என்பதாகவே நினைத்துக் கொள்கின்றனர்.அவ்வாறே அவர்கள் உறக்கம் என்பது மனிதனுக்கு அவசியமான செயல்தான் என்பதை கூட ஏற்க தயாராகவும் இல்லை.ஏனோ மனிதன் அவ்வப்பொழுது அதனை கட்டாயத்தின் அடிப்படையில் வேறு வழியின்றி ஒவ்வொரு நாளும் சடங்காக செய்வதற்கு ஆட்படுத்தப்பட்டு விட்டான் என்பதாகவே எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் உண்மையென்ன வெனில் மனிதனின் செயல்பாட்டிலேயே மிக உன்னதமான செயல் உறக்கம் தான் என்பதாகவே நான் கருதுகின்றேன்.

ஆம் ..!மனிதன் எந்தளவிற்கு தன் உடலாலும் அசைவுகளாலும் செயல்புரிகின்றானோ அதே அளவிற்கு தன் உடலையும் அசைவுகளையும் செயலற்ற செயலில் வைப்பது மிக அவசியமாகும்.அது மனிதன் செய்யும் ஏதோ ஒரு சடங்கோ அல்லது சம்பரதாயமோ அல்ல,மாறாக அதுதான் ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் மீட்சி ஆகும்.இதனைத்தான் ஆன்மீக குருக்கள் உறக்கம் என்பது சிறிய இறப்பு என்பதாக குறிப்பிடுகின்றனர்.
அதாவது மனிதன் உறக்கத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் இறந்து எழுகின்றான் என்பதாக கூறுகின்றனர்.இதனை அறிவியல் ஆய்வாளர்களும் உண்மைபடுத்தவே செய்கின்றனர்.அதாவது ஒரு மனிதன் தூங்கி எழுந்த பிறகு அவனுடைய உடலாலும் சிந்தனையாலும் கடந்த காலத்தை கடந்துவிடுகின்றான் என்பதாகவும் அதனால் அவன் பெரும்பாலும் புதியதொரு மனிதனாகவே இவ்வுலகில் தோன்றுகின்றான் என்பதாகவுமே உலவியல் நிபுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆக உறக்கம் என்பது நம் வாழ்வின் மிகப்பெரும் தாக்கத்தை உண்டு செய்யும் ஒரு அற்புத இயக்கம் அல்லது உண்ணத செயல் என்பதுதானே தவிர அது நம் வாழ்வியலை செயலற்றதாக்கும் ஏதோ ஒரு வெற்று சடங்கல்ல என்பதை நம்மில் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனபதையே இங்கு நான் முதற்கண் வேண்டிக்கொள்கின்றேன்.அடுத்தபடியாக மனிதன் உறங்குவதால் எத்தகைய ஆரோக்கிய நிலைகளையெல்லாம் பெற்றுக்கொள்கின்றான் என்பது சம்மந்தமாக ஒரு சில முக்கிய பலன்களை பார்ப்போம் வாருங்கள்..!


உறக்கத்தின் பலன்கள்.

1.மூலைக்கு நியாபக சக்தியையும்,புத்துணர்ச்சியையும் ஊட்டுகின்றது.

பொதுவாகவே மனிதனின் மூலை பெரும்பாலும் அதிகம் செயல்பட்டுக் கொண்டே இருப்பதாகும்.ஆனால் மனிதன் எப்பொழுது தூங்குவானோ அப்பொழுது மூலை அதனுடைய வெளிசெயல்களை நிறுத்திவிட்டு முன்பு எதையெல்லாம் பதிவிட்டதோ அவற்றையெல்லாம் மீண்டும் மீட்டிப்பார்த்து அவற்றில் எது மிக அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதனை மட்டும் 
உள்பதிவேட்டில் பதிவு செய்து கொண்டு மீதியை வெளியே தூக்கி எறிந்துவிடுகின்றது.இதன் மூலம் ஒரு மனிதன் 50 ஆண்டுகளுக்கு முன்பு உணர்ந்த ஒன்றையும் ஒரு நொடியில் அடையாளம் கண்டுவிடலாம் என்பதாக அறிவியல் அறிஞர்கள் குறிப்பிட்டுக்காட்டுகின்றனர்.மேலும் இத்தகைய மகத்தான திறனை தூக்கம்தான் ஏற்படுத்துகின்றது என்பதையும் மிகத்துள்ளியமாக குறிப்பிட்டுக்காட்டுகின்றனர்.


2.இதயத்தை சீராக துடிக்கச் செய்கின்றது.

மனிதன் வெளியில் செயல்படும் சமயம் பல்வேறு விதங்களில் துடிக்கும் இதயம் தூங்கும் சமயம் அவற்றின் தாக்கங்களை விட்டும் தன்னை தற்காத்துக்கொண்டு அவை தன்னுடைய இயல்பு நிலைக்கு வருகின்றது. இதனால் பெரும்பாலும் நம் இரத்த ஓட்டம் சீராகி இதய நோய்களிலிருந்தும் நாம் பாதுகாக்கப்படுகின்றோம் என்பதாக மருத்துவர்களில் பலரும் விவரிக்கின்றனர்.அவ்வாறே இதயம் தன்னிடம் வரும் இரத்தத்தை உடனே சுத்திகரித்துதான் அனுப்புகின்றது என்றாலும் குறிப்பாக உறக்கத்தின் போதே இரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையை இதயத்தால் மிக சீராக செய்ய முடிகின்றது என்பதாகவும் கூறுகின்றனர்.


3.கவணிக்கும் திறனை அதிகப்படுத்துகின்றது.

உறக்கத்தின் மூலம் பழைய காட்சிகள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் அடிமனதிற்கு சென்றுவிடுவதால் ஒருவர் நன்றாக தூங்கி எழுந்து விடுவாரேயானால் அவருடைய கவனிக்கும் திறனும் சிந்திக்கும் ஆற்றலும் மிக புத்துணர்வோடு செயல்படுகின்றது என்பதாகவே உலவியல் நிபுனர்கள் குறிப்பிடுகின்றனர்.எனவே மாணவர்களுக்கும் உறங்கி எழுந்த பிறகுள்ள நேரத்தையே படிப்பதற்காக பரிந்துரைக்கவும் செய்கின்றனர்.ஏனெனில் வாசிப்பு அல்லது கற்றல் என்பது கவனத்தை அடிப்படையாகக்கொண்டது என்பதால் பெரும்பாலும் தூங்கி எழும் ஒரு நபரால் அதனை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதாக அவர்கள் விவரிக்கின்றனர்.


4.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றது.

ஒருவர் நன்றாக உறங்குவதால் அவருடைய உடலில் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தியை உறுவாக்கும் செல்கள் இடம்பெறுகின்றது என்பதாக பல்வேறு மருத்துவர்களும் குறிப்பிடுகின்றனர்.இதனால் தான் நோய்வாய் பெற்றவர்களுக்கு அவ்வப்பொழுது தூக்கத்தையும் மருந்தாக பரிந்துரைக்கப்படுகின்றது என்பதாகவும் விளக்கமளிக்கின்றனர்.


5.உடலை புத்துணர்வூட்டுகின்றது.

மனிதன் விழித்திருக்கும் நிலையில் உடலால் அதிகம் செயல்படுவதால் இயற்கையாகவே ஒரு குறிப்பிட்ட சமயத்தில் சோர்வை சந்தித்தித்து விடுகின்றான்.அச்சமயங்களில் மனிதன் உறங்குவதை தவிர அதற்கான சிறந்த நிவாரணி எதுவொன்றையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதாகவே மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.எனவே மனிதன் தன் உடல் சோர்வை நீக்கவும்,தன்னை மீண்டும் மீண்டும் மீட்டி புத்துணர்வுமிக்கவனாக ஆக்கிக்கொள்ளவும் உறக்கம் மட்டுமே இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரும் வரமாக இருக்கின்றது என்றால் நிச்சயம் அது மிகையாகாது.

ஆக உறங்குவதின் பலன்கள் மேற்கூறப்பட்டவை தவிர்த்து இன்னும் ஏறாலமாக இருக்கின்றது என்றாலும் அவை அனைத்தையும் இங்கு நான்  சுட்டிக்காட்டுவதின் மூலம் உங்களுடைய வாசிப்பை சலிப்படைய செய்துவிடுவேனோ என்று அஞ்சுகின்றேன்.எனவே உறக்கம் என்பது ஏதோ நாம் நம்முடைய கலைப்பை ஆற்றிக்கொள்ளும் ஒரு சிறிய சடங்கு மட்டுமே என்று எண்ணி உறங்குவதை நிறுத்துவிட்டு அதனால் நம் வாழ்வின் பல்வேறு பகுதிகள் செழிப்பாகின்றது என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ளுங்கள் என்பதை மட்டும் இங்கு நான் பணிவன்போடு கேட்டுக்கொண்டு அடுத்தபடியாக உறங்காமல் போவதால் எப்படிப்பட்ட பாதிப்புகளை யெல்லாம் நாம் சந்திப்போம் என்பது குறித்து சில விளக்கங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்..!


உறங்காமல் போவதன் பாதிப்புகள் என்ன.?

1.இதய நோய் ஏற்படுத்துகின்றது.

பெரும்பான்மையான இதய நோய்கள் சீறான உறக்கமின்மையால் மட்டுமே ஏற்படுகின்றது என்பதாக மருத்துவர்கள் மிக உறுதியாக குறிப்பிடுகின்றனர்.அதிலும் குறிப்பாக யார் சரிவர உறங்குவதில்லையோ அவர்கள் கட்டாயம் இரத்த அழுத்த நோயிற்கோ அல்லது சர்க்கரை நோயிற்கோ ஆலாகின்றார்கள் என்பதாகவும் கூறுகின்றனர்.


2.உடற் பருமனை அதிகரிக்க அல்லது மெலியச் செய்கின்றது.

சீறான உறக்கமின்மை என்பது நம்முடைய உடற்பருமனை மிக வேகமாக அதிகரிக்கச் செய்துவிடும் என்றும், சிலருக்கு அது உடலை மிக மோசமாக மெலியச் செய்துவிடும் என்றும் பல்வேறு மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்.


3.தோள் நோய்களை ஏற்படுத்தும்.

சீறான உறக்கமின்மை என்பது உடலில் தோள் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கு மிக நெருக்கமான காரணியாக இருக்கின்றது என்பதாக பல்வேறு மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்.


4.மூலையில் மந்தத்தன்மையை ஏற்படுத்துகின்றது.

சீறான உறக்கமின்மையால் மூலையின் செயற்பாடுகள் முழுவதுமாக வழுவிழந்து மந்தமாக செயலபடத்தொடங்கிவிடுகின்றது.இதனால் மனிதனுடைய சிந்திக்கும் திறன் மற்றும் அவனுடைய கவனிக்கும் ஆற்றல் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு பல சமயங்களில் புத்தி பேதலிப்பதற்கு இதுவே காரணமாக அமைந்துவிடுகின்றது என்பதாகவே மருத்துவர்களில் பலரும் எச்சரிக்கின்றனர்.ஆக இது போன்று உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளை சரியான உறக்கமின்மையால் ஒருவர் அடைவதற்கு அதிகம் சாத்தியம் இருக்கின்றது.இவை ஒருபுறமிருக்க ஒருவர் மொத்தமாகவே உறங்குவதில்லை என்றால் என்ன நடக்கும் என்பதையும் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.அதாவது சராசரியாக ஒரு மனிதன் 3 அல்லது 4 நாட்களிலிருந்து 11 நாட்கள் வரை உறக்கமே இன்றி வாழ முடியும் என்றும் அதையும் ஒரு மனிதன் தாண்டிவிட்டால் அதிகபட்சம் அவன் இறந்துவிடுவான் அல்லது முற்றிலுமாக அவனுடைய உடல் செயல் இழந்துவிடும் என்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே முற்றிலுமாக உறக்கமின்மை என்பதை ஒருகாலமும் உங்கள் வாழ்வில் நினைத்துப்பார்த்துவிடாதீர்கள்.குறிப்பாக இரவு பணியாற்றுபவர்களுக்கு இந்த பிரச்சணை இருப்பதாகவே நான் காண்கின்றேன்.அதாவது இரவில் பணியாற்றிவிட்டு பகலிலும் உறக்கமின்றி இருந்துவிடுகின்றனர்.இது உங்கள் உடலை மிகப்பெரும் ஆபத்தில் நீங்களே தள்ளிவிடும் மாபாதக செயல் என்பதை நன்றாக நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள் என்பதை அன்போடு வேண்டுகின்றேன்.சரி இதுவரை உறங்காமல் போவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து சில விளக்கங்களை பார்த்தோம் இப்பொழுது அதிகம் உறங்குவதால் எத்தகைய பாதிப்புகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் என்பது குறித்தும் சில விளக்கங்களை பார்த்துவிடுவோம்.


அதிகம் உறங்கலாமா..?

அதிகம் உறங்கலாமா? என்பது குறித்து நாம் பார்ப்பதற்கு முன்பு அதிகம் உறங்குவது என்றால் என்ன என்பது குறித்து அறிந்து கொள்வது மிக அவசியமாகும்.அவ்வாறே அதிகம் உறங்குவதை நாம் அறிந்து கொள்ள ஒரு மனிதன் சராசரியாக எவ்வளவு மணி நேரம் உறங்கினால் அவனுடைய உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்பது குறித்து அறிந்துகொள்வதே மிகச் சரியானதாக இருக்கும்.எனவே வாருங்கள் முதலில் ஒரு மனிதன் சராசரியாக எவ்வளவு மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்வோம்.


ஒரு மனிதனின் சராசரி உறக்க நேரம் என்ன?

3 லிருந்து 5 வயதுடையோர்                    =   10 லிருந்து 13 மணி நேரம்.

6 லிருந்து 12 வயதுடையோர்                  =   9 லிருந்து 12 மணி நேரம்.

13 லிருந்து 18 வயதுடையோர்                =   8 லிருந்து 10 மணி நேரம்.

19 லிருந்து 60 வயதுடையோர்                =   7 லிருந்து 8 மணி நேரம்.

இவற்றில் எந்த வயதுடையவரானாலும் சரி நோய்வாய்பட்டிருந்தால் அப்பொழுது அவர் மருத்துவத்தின் அடிப்படையில் 14 லிருந்து 18 மணி நேரம் வரை தூங்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.அவ்வாறே பிறந்த குழந்தைகளும் 16 லிருந்து 18 மணி நேரம் தூங்குவதே ஆரோக்கியம் என்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.ஆக யார் எவ்வளவு நேரம் சராசரியாக உறங்க வேண்டும் என்பதை ஓரளவு விளங்கியிருப்பீர்கள் என்றே கருதுகின்றேன்.எனவே அடுத்தபடியாக வாருங்கள் அதிகம் உறங்குவது என்றால் என்ன ?அவ்வாறு உறங்கலாமா என்பது சம்மந்தமாக சில விளக்கங்களை பார்த்துவிடுவோம்.


அதிகம் உறங்கலாமா?

மேற்கூறப்பட்டவர்களில் மேற்கூறப்பட்ட நேரத்தை தாண்டி உறங்குவது கட்டாயம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதாகவே மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.அதிலும் குறிப்பாக 19 லிருந்து 60 வயதுடையோர்கள் 14 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் கட்டாயம் அவர்களுக்கு ஹைபர் சோமேனியா என்ற நோய் ஏற்படும் என்பதாக எச்சரிக்கின்றனர்.அதனால் அவர்கள் எப்பொழுதும் தூக்க கலக்கித்திலேயே காணப்படுவார்கள் என்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.அது ஒரு மனிதனை உறிஞ்சக்கூடிய மிகக்கொடிய நோய் என்பதாகவும் எச்சரிக்கின்றனர்.எனவே அதிகம் உறங்குவது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரும் ஆபத்து என்பதாகவே பெரும்பாலான மருத்துவர்கள் விவரிக்கின்றனர் என்பதை எல்லா சமயங்களிலும் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக சிலர் குறிப்பிட்ட நேரத்தில் துங்குவதற்கு நாங்கள் முயற்சிக்கவே செய்கின்றோம் ஆனால் உறக்கம் நீங்கள் குறிப்பிட்ட சராசரி மணி நேரம் வருவதில்லையே என்று கேட்கின்றனர்.எனவே சராசரியான உறக்கத்திற்கான சில வழிமுறைகளையும் கீழே நான் பதிவு செய்கின்றேன். முடிந்தால் அவற்றையும் கடைபிடித்துப்பாருங்கள்.நிச்சயம் பலன் கிடைக்கும் என்றே நம்புகின்றேன்.


சராசரி உறக்கத்திற்கான வழிமுறைகள்.!

  1. தினமும் உறங்க செலவதற்கான குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
  2. உறங்கும் அறையை உறங்குவதுற்கு உகந்ததாக மிதமான குளிராக்கிக்கொள்ளுங்கள்.
  3. இன்னும் உறங்கும் அறையை பெரும்பாலும் மிதமான இருளாக்கிக் கொள்ளுங்கள்.
  4. உறக்கத்தை கெடுக்கும்படியான எப்பொருளையும் அறையில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
  5. மெல்லிய ஆடைகளை உறக்கத்திற்காக பெரும்பாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
  6. மிருதுவான படுக்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
  7. உறங்க செல்வதற்கு முன்பு சற்று அமைதியாக பிரார்த்தணையின் மூலமோ அல்லது புத்தகம் வாசிப்பின் மூலமோ உடலை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்.
  8. காலை சூரிய ஒளி உங்கள் மிது படும்படியான இடத்தில் முடிந்தளவு உறங்குங்கள்.
மேற்கூறியவாறு நீங்கள் உறங்க முயற்சியுங்கள் கட்டாயம் உங்களால் சராசரி உறக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றே நான் நம்புகின்றேன்.

வியாழன், 14 ஏப்ரல், 2022

உறவின் ரகசியங்கள்!


முன்னுரை:

"உறவின் ரகசியங்கள்"என்ற இந்த சிறிய புத்தகத்தை இந்த உலகில் கலப்பற்று உறவாட நினைக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்காகவும் தொகுத்துவருகின்றேன்.அந்த புத்தகத்தில் உறவுகள் என்றால் என்ன .?என்பதையும் அது எங்கிருந்தெல்லாம் தோன்றுகின்றது என்பதையும் என் சிந்தைக்கு உட்பட்டு மிக விரிவாக விளக்கி இருக்கின்றேன்.அவ்வாறே மக்கள் எதையெல்லாம் உறவாடுவதற்கான அளவுகோலாக எடுத்துக்கொள் கின்றார்கள் என்பது குறித்தும் அவற்றின் உண்மை நிலை என்ன என்பது குறித்தும் மேலும் எத்தகைய உறவுகளெல்லாம் தோற்றுப்போகின்றது என்பது குறித்தும் மிக விரிவாகவே விவரித்து இருக்கின்றேன்.நிச்சயமாக அந்த சிறிய புத்தகம் இந்த மனித சமூகத்துடன் உறவை மேம்படுத்த விரும்பும் அனைவருக்கும் மிக பயனலிக்கக்கூடியதாக அமையும் என்றே ஆதரவு வைக்கின்றேன்.இப்பொழுது அப்புத்தகத்தின் ஒரு சில பகுதியயி மட்டும் இந்த கட்டுரையில் தருகின்றேன்.தொடர்ந்து வாசித்து வாருங்கள்..

நாம் உறவின் பல்வேறு ரகசியங்களை அறிவதற்கு முதலில் உறவு என்றால் என்ன என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதால் இங்கு உறவு என்றால் என்ன என்பதற்கு மொழி ரீதியான மேலும் அகராதி ரீதியான பொருள் என்ன என்பதை விளக்குவதே மிகப்பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.எனவே முதலில் உறவு என்றால் என்ன என்பது சம்மந்தமாக மொழியின் அடிப்படையிலும் அகராதியின் அடிப்படையிலும் சிறியதோர் அறிமுகத்தை இங்கு பதிவிட்டுவிடுகின்றேன்.

உறவு என்றால் என்ன..?

உறவு என்ற சொல்லிற்கு பெரும்பாலும் அகராதியில் :

"இரு மனிதர்களுக்கு மத்தியில் ஏற்படும் தொடர்பு என்றும் இரு மனிதர்களுக்கு மத்தியில் ஏற்படும் இசைவு அல்லது பிணைப்பு" என்றுமே பொருள் கொள்ளப்படுகின்றது.இவற்றை தவிர்த்து இரு நபர்கள் திருமண ஒப்பந்தத்தின் அடிப்படையில் அல்லது அன்பின் அடிப்படையில் உடலால் இணைவதற்கும் மேலும் இரு நபர்கள் இரத்தபந்தத்தால் இணைவதற்கும் உறவு என்றே பொருள் கொள்ளப்படும் என்பதாகவும் அகராதியில் நம்மால் காணமுடிகின்றது.இவை உறவு என்பதற்கு மொழி மற்றும் அகராதி ரீதியிலான விளக்கமாகும். இவையன்றி உறவு என்பதற்கு சமூகம் எத்தகைய பொருள் கொள்கின்றது என்பது சம்மந்தமாகவும் நாம் அறிந்து கொள்வது என்பது உறவின் பல்வேறு ரகசியங்களை ஆழமாக நாம் அறிந்து கொள்வதற்கு மிக உதவியாக இருக்கும் என்பதால் அதனையும் சற்று வட்டுறுக்கமாக இங்கு விவரித்துவிடுகின்றேன்.

உறவு சம்மந்தமான சமூக புரிதல் என்ன..?

மக்களில் பலரும் உறவு என்பது வெறும் திருமண ஒப்பந்தத்தாலும் அல்லது இரத்த பந்தத்தாலும்  ஏற்படுவது மட்டுமே என்று தங்களுக்கு தாங்களே நினைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தங்களை தாங்களே போட்டுக்கொள்வதையே இன்றைய நிதர்சன வாழ்வில் நாம் பெரும்பாலும் காண முடிகின்றது.பெரும்பான்மையான மக்களின் இந்த புரிதலே பெரும்பாலும் மனிதர்களோடு பொதுவாக பேசுவதையோ அல்லது பழகுவதையோ தவிர்த்துக் கொள்வதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்துவிடுகின்றது என்றே நான் கருதுகின்றேன்.

இத்தைகைய புரிதல்தான் பெரும்பான்மையான மனிதர்களை தூரப்படுத்துவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது என்றும் நான் நம்புகின்றேன்.ஏனெனில் இத்தகைய புரிதல் உடையவர்கள் வெளிப்படையாகவே தன் ரத்தபந்தமல்லாத அல்லது திருமணபந்தமல்லாத பிறமனிதர்களை வெறுத்து ஒதுக்குவதற்கே முற்படுகின்றனர்.மேலும் அவ்வாறு செயல்படுவதையே அவர்களுக்கான பாதுகாப்பாகவும் அவர்கள் எண்ணிக்கொள்கின்றனர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கின்றது என்பதையும் நான் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கின்றேன்.

உண்மையில் இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததுதான் என்றாலும் இங்கு தான் உறவின் சில வகைகளை அவர்கள் உணரத்தவறுகின்றனர் என்பதாகவும் கருதுகின்றேன்.மேலும் மேம்போக்கான அவர்களின் தவறான புரிந்துணர்வால் பெரும்பான்மையான மக்களிடம் தெரிந்தோ தெரியாமலோ வெறுப்பை மட்டுமே வேறூன்றச் செய்துவிடுகின்றனர் என்பதையும் இங்கு உலவியல் உண்மையாக நான் வறுத்தத்தோடு பதிவு செய்கின்றேன்.அதாவது உறவு என்பது தொடர்பினாலும் சந்திப்பினாலும் மேலும் அவற்றில் ஏற்படும் ஆழமான புரிதலாலும்தான் உறுவாகின்றது என்ற உண்மையை மறந்து இரத்த உறவுகள்தான் தொடர்பையும் ,சந்திப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் தங்களுக்கு தாங்களே தவறான புரிதலை கேடயமாக்கிக் கொண்டது என்பது மிக வருத்தத்திற்குறிய விஷயமாகும் என்றே நான் கருதுகின்றேன்.

அவ்வாறே அவர்கள் உறவு என்றாலே அது தன்னை முழுவதுமாக ஒப்படைக்க கூறும் திருமண உறவு மட்டும்தான் என்றும் அல்லது தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் இடமளிக்கும் அளவிற்கான ஆழமான உறவு என்பது மட்டும்தான் என்றும் தங்களுக்கு தாங்களே ஒரு தவறான புரிதலை ஏற்படுத்திக் கொண்டது என்பதும் மிக வருந்தத்தக்க செயலாகவே நான் கருதுகின்றேன்.இந்த தவறான புரிந்துணர்வே பெரும்பாலும் ஏனைய மனிதர்களை அவர்கள் வெளிப்படையாகவே புறக்கணிப்பதற்கான முக்கிய காரணியாகவும், உலவியல் உண்மையாகவும் அமைந்திருக்கின்றது என்பதை என்னால் அருதியிட்டுக் கூற முடியும்.எனவே இத்தகைய மனித விரோத புரிதலையே முதலில் கலைய வேண்டிய அவசியமிருக்கின்றது என்ற அடிப்படையில்  இங்கு மக்கள் பெரிதும் கவனத்தில் கொள்ளாத சில உறவுகளின் வகைகளை விளக்க வேண்டிய அவசியமிருக்கின்றது என்றே நான் உணர்கின்றேன்.அவற்றை இங்கு பதிவு செய்வது மனிதத்தோடு உறவாட விரும்பும் அனைவருக்கும் மிக பிரயோஜனம் மிக்கதாக இருக்கும் என்றும் கருதுகின்றேன்.எனவே வாருங்கள் மக்கள் தங்கள் வாழ்வில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய உறவின் சில வகைகளை முதலில் அறிந்து கொள்வோம்...!

உறவின் வகைகள்..!

1.பொதுவான உறவு.

2.தனிப்பட்ட உறவு.

3.ஆழமான உறவு.

இந்த மூன்று வகையான அனுகுமுறையையும் இன்றைக்கு நம்மில் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே கடைபிடித்து வருவது என்பது உண்மையில் ஆச்சர்யப்படத்தக்கதாகும்.ஆம் நம்மில் ஒவ்வொருவரும் இந்த மூன்று வகையான அனுகுமுறையையும் உறவில் கடைபிடித்துக்கொண்டே இருக்கின்றோம்.ஆனால் அதனை எப்படி கடைபிடிப்பது யாரிடம் கடைபிடிப்பது என்பதில் தான் பெரும்பாலோர் தவறிழைத்துவிடுகின்றனர். அந்த அனுகுமுறைகளை நாம் மிக இலகுவாக புரிந்து கொள்வதற்கு நம் வாழ்வில் நாம் அன்றாடம் கடைபிடித்து வரும் பேச்சை உதாரணமாக சுட்டிக்காட்டுவது இங்கு மிகப்பொறுத்தமானதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.எனவே அவ்வுதாரணத்தின் மூலமே விளக்குவதற்கு முயற்சிக்கின்றேன்.

பொதுவாகவே நம்முடைய பேச்சில் மூன்று வகையான அனுகுமுறைகள் பொதிந்து இருக்கின்றது.அவற்றில் 1.பொதுவான பேச்சு என்ற ஒன்றும்,2.தனிப்பட்ட பேச்சு என்ற ஒன்றும்,3.ஆழமான(இரகசிய) பேச்சு என்ற ஒன்றும் எப்பொழுதும் இருக்கவே செய்கின்றது.இது நாம் எல்லோரும் நமக்கு தெரியாமலே நம்முடைய பேச்சில் கடைபிடித்து வரும் ஒரு சாதாரண செயல்தான் என்றாலும் இதனை பலரும் தெரிந்து கடைபிடிப்பது கிடையாது. அவ்வாறே இதனை எப்படி கடைபிடிப்பது என்பதிலும், யாரிடம் கடைபிடிப்பது என்பதிலும் பெரும்பாலானோர்  தவறிழைத்துவிடுகின்றனர் என்பது எனது கண்ணோட்டமாகும்.

அது எப்படி மக்கள் இது விஷயத்தில் தவறிழைக்கின்றார்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்கள் என்று என்னைப்பார்த்து நீங்கள் கேட்கலாம். அவசரப்படாதீர்கள்..!அதற்கான விளக்கத்தை இங்கு நான் முழுவதுமாக குறிப்பிடுகின்றேன்.

அன்றாட பேச்சும் உறவின் அனுகுமுறையும்..!

நான் மேலே கூறிய மூன்று வகையான பேச்சுக்களையும் உங்கள் மனதில் நன்றாக நினைவில் நிறுத்திக்கொண்டு உங்கள் பொதுவாழ்வில் நீங்கள் எப்படி பேசுகின்றீர்கள் என்பதை சற்று ஆழமாக உற்று நோக்கிப்பாருங்கள். ஒன்று நீங்கள் எல்லோரோடும் ஒரேவிதமாக பேசுபவராக இல்லாமல் இருக்கலாம்.அல்லது எல்லோரிடமும் ஒரே விதமாக பேசுபவராக இருக்கலாம். ஒருவேலை இந்த இருவகையினரில் நீங்கள் எல்லோரிடமும் ஒரே விதமாக பேசும் இரண்டாவது வகையினராக இருந்தால் நீங்கள்தான் நான் மேலே கூறிய அந்த தவறிழைக்கும் நபர்கள் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.மேலும் நீங்கள் சந்திக்கும் மக்கள் ஒரே மாதிரியானவர்கள் இல்லை என்பதையும் மேலும் நீங்கள் புரிந்து கொள்ளாதவர்களாகவே இருக்கின்றீர்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

அடுத்த பதிவில் தொடர்வோம்:

புதன், 6 அக்டோபர், 2021

யார் நல்லவர் ?யார் கெட்டவர்?(Who is good and who is bad)


யூதர்களின் ஒரு சுவாரஸ்யமான கதை..!

ஒரு கோபக்கார கடவுள் ஒரு நகரத்தில் அங்குள்ள மக்களெல்லாம் மிக மோசமானவர்களாக இருக்கின்றனர் என்பதற்காக அந்த நகரத்தையே அழிக்கப்போவதாக முடிவெடுத்தார்.அப்படி அழிப்பதற்கு முன்பு அங்கு வசித்துவந்த தனக்குப்பிடித்தமான ஒரு துறவியை அழைத்து இந்த நகரத்தை நான் அழிக்கப்போகின்றேன் எனவே நீங்கள் அங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று கூறினார்.

இதனை கேள்விபட்ட துறவி சற்று யோசித்துவிட்டு கடவுளே நீங்கள் அழிக்கவிருக்கும் அந்த நகரத்தில் ஆயிரம் தீயவர்கள் இருக்கின்றார்கள் என்பது உண்மை என்றாலும் நூறு நல்லவர்களும் இருக்கின்றனரே அதனை என்ன செய்ய இருக்கின்றீர்கள் என்றார்...!உடனே கடவுளும் ஆமாம் இதனைப் பற்றி நான் யோசிக்கவே இல்லையே நல்லவேலை கூறினாய்..! சரி அங்கு யார் அந்த நூறு நபர்கள என்பதை எனக்கு காட்டு நான் அவர்களுக்காக அவ்வூரை விட்டுவிடுகின்றேன் என்றார்.அதற்கு துறவி கடவுளே சற்று பொறுங்கள்..

அங்கு நூறு நல்ல நபர்கள் இருப்பார்களா என்பது எனக்கு தெறியாது ஆனால் அங்கு பத்து நபர்கள் நல்லவர்களாக இருந்தால் அவ்வூரை என்ன செய்வீர்கள் என்றார்.கடவுளோ அங்கு நூரோ பத்தோ எண்ணிக்கை முக்கியமல்ல அங்கு நல்லவர்கள் இருக்கின்றார்கள் என்பதை எனக்கு நிறூபி நான் அந்த ஊரை விட்டுவிடுகின்றேன் என்றார்.

உடனே துறவி கடவுளே என்னால் என்னை தவிர வேறு யாருக்கும் பொறுப்பேற்க முடியாது.நான் என்று நல்லவனாக ஆனேனோ அன்றிலிருந்து யாரையும் நல்லவன் கெட்டவன் என்று பிறித்துப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். என்னைப் பொறுத்த வரை எல்லோரும் நல்லவர்களே.நான் யாரிடமும் கெட்ட தனத்தை பார்ப்பதில்லை.ஏனெனில் கெட்ட தன்மை என்பது ஒரு நிழல் போன்றது.அது ஒரு மனிதனின் உண்மை தன்மை ஆகாது என்பதே எனது எண்ணம்.

கெடுதல் உண்டாக்கும் செயலை ஒருவன் செய்திருக்கலாம் ஆனால் அது அவனுடைய இருப்பையே கெட்டதாக்கிவிட முடியாது என்றே நான் கருதுகின்றேன்.ஒருவன் ஒரு கெட்ட செயல் அல்லது இரு கெட்ட செயல் அல்லது நூறு கெட்ட செயல்கள் கூட செய்திருக்கலாம் ஆனால் அது அவனது இருப்பை ஒருபோதும் கெடுப்பது இல்லை.அவனுடைய இருப்பு எப்பொழுதும் தூய்மையாகவே உள்ளது .ஏனெனில் இருப்பு என்பது ஒருவனை அச்செயலை விட்டும் எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேற்றிவிடும்.அது அவனது கடந்த காலத்தையும் கூட கடக்கச்செய்துவிடும்.எனவே நிரந்தரமற்ற அவனது செயலை வைத்து அவனது இருப்பை எவ்வாறு தீயவன் என்றோ அல்லது நல்லவன் என்றோ முடிவு செய்ய முடியும்..?

எனவே கடவுளே நான் அந்த நகரத்தில் தான் வசிக்கின்றேன் பலரும் அங்கு நல்லவர்கள்தான் என்று என்னால் உறுதியாக கூற முடியாது என்றாலும் அவர்கள் நற்செயல்களும் செய்யவே செய்கின்றனர் என்றார்.அதனை கேட்ட கடவுள்.அந்த நகரத்தை அழிக்க வேண்டும் என்ற முடிவை மாற்றிக் கொண்டார் என்பதாக அக்கதை முடிகின்றது.

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்..?(Monk story with a king)

ஒரு நாட்டின் அரசன் மிக பயபக்தியானவர்.அவர் எப்பொழுதும் இரவு நேரத்தில் மாறுவேடத்தில் மக்களின் நிலையை அறிவதற்காக நகர்வளம் செல்வதுண்டு.அப்படி அவர் செல்கையில் தினமும் ஒரு வாலிபன் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துகொண்டு செல்வார்.ஒரு நாள் ஆர்வமிகுதியால் தன் குதிரையை விட்டும் இறங்கி அவ்வாலிபனிடம் சென்றார்.

"வாலிபனே நான் உன் தியானத்தை கலைத்தற்காக மன்னித்து விடு என்றார்.வாலிபனோ தன் கண்களை மெல்லமாக திறந்து "இல்லை நான் தியானம் செய்வதில்லை அது எப்பொழுதும் என்னுடன் தான் இருக்கின்றது , அது எப்பொழுதும் என்னைவிட்டும் கலைவதில்லை எனவே நீங்கள் மன்னிப்பு வேண்டவேண்டிய எந்த அவசியமுமில்லை ஏன் அழைத்தீர்கள் என்று சொல்லுங்கள் என்றார்.அரசன் " நான்தான் இந்நாட்டின் அரசன்.என்னுடைய அரன்மனைக்கு நீங்கள் வந்துவிடுங்கள்.அங்கு நான் உங்களை நன்றாக பார்த்துக்கொள்கின்றேன்.நீங்கள் இந்த மரத்தடியில் அமர்ந்துகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.உங்களுடைய தவத்தாலும்,ஒளியாலும், அமைதியினாலும் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுவிட்டேன்.எனவே தயவு கூர்ந்து என்னுடன் வந்துவிடுங்கள் என்றார்.

(உண்மையில் அந்த துறவி தன் அழைப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றே அரசர் விரும்பினார்.ஏனென்றால் துறவி அதனை ஏற்றுவிட்டால் அவர் அரன்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்பிதான் இருந்திருக்கின்றார் என்று ஆகிவிடும் என்று பயந்தார்.)ஆனால் அந்த வாலிபர் எழுந்து போகலாம் என்றார்.

அப்போது அரசருடைய மனம் முழுவதும் ஒரு வெள்ளப்பிரலயமே ஓங்கி வீசுகின்றது."இவர் அரன்மணையில் உள்ள சுகபோகங்களை அனுபவிப்பதற்கு விரும்புகின்றார்போல் தெரிகின்றதே,அப்படியானால் இவர் உண்மையான துறவி இல்லைபோல் தெரிகின்றது.ஏனென்றால் துறவிகள் என்பவர்கள் தங்களை வருத்தி கொள்பவர்கள்தான் என்று அவர் புரிந்து வைத்திருந்தார். ஆனால் இந்த வாலிபர் அரன்மணையை விரும்புகின்றாரே என்பதை கண்டு இவர் ஒரு போலி துறவி என்றே முடிவெடுத்துக் கொள்கின்றார்.

ஆனாலும் வார்த்தை மாறமுடியாதே என்பதற்காக வேறுவழியின்றி வாலிபரை அரன்மணைக்கு அழைத்து செல்கின்றார்.அங்குள்ள பிரத்யேக அறையை அவருக்காக தயார்செய்தும் கொடுத்தார்.மேலும் பணியாட்களையும் அழகிய அந்தபுறப் பெண்களையும் அனுப்பி வைத்தார்.வாலிபர் இவற்றில் எதனையும் மறுக்கவில்லை.அனைத்தையும் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார்.அரசனின் எண்ணம் இன்னும் வலுப்பெற்றது.இந்த வாலிபன் என்னை ஏமாற்றிவிட்டான். நான் கடந்துசெல்லும் இடத்தை சரியாக கண்டுபிடித்து என்னிடம் அவன் தியானம் செய்வதுபோல் நடித்து ஏமாற்றிவிட்டான் என்று மனதுக்குள்ளேயே முடிவெடுத்துக் கொண்டார்.

இதே எண்ணத்தோடே அரசர் சில நாட்களை பல்லை கடித்துக்கொண்டு கடந்தார் என்றாலும் அவற்றை எல்லாம் போட்டு உடைப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்.அப்படி ஒரு நாளும் வந்தது.ஆம்..!
ஒரு நாள் துறவியும் அரசரும் ஒரு இடத்தில் அமர்ந்து தேநீர் அருந்தும் சூழல் ஏற்பட்டது.அப்பொழுது இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணி வாலிபரே உங்களிடம் நான் ஒரு சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள ஆசிக்கின்றேன் என்றார்.துறவியும் கேளுங்கள் என்றார்.

அரசர் சற்று தயக்கத்துடனே இதை நான் கேட்க விரும்பவில்லை என்றாலும் என் பாலாய்ப்போன மனம் அதனை உறுத்திக் கொண்டே இருக்கின்றது எனவேதான் நான் இதை கேட்கின்றேன் என்றார்.துறவி பரவாயில்லை கேளுங்கள் என்றார்...!அரசர்"உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன..?"தயவு செய்து எனக்கு விளக்கம் கூறுங்கள்.ஏனெனில் நான் அனுபவிக்கும் அனைத்தையும் நீங்களும் அனுபவிக்கின்றீர்கள் அப்படியானால் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன என்று சற்று விரப்புடனே கேட்டார்.

அதற்கு அந்த வாலிப துறவியோ இந்த சந்தேகம் "நான் உன் அரன்மணைக்கு வருவதாக ஒப்புக்கொண்டபோதே உன்னிடம் தோன்றிவிட்டது என்பதை நான் நன்றாக அறிவேன்.ஆனாலும் நீர் ஒரு கோழை.அன்றே இந்த கேள்வியை கேட்டிருந்தால் உன் மனம் நிம்மதியாக இருந்திருக்கும்.சரி இப்பொழுதாவது கேட்டாயே..! என்று கூறி விட்டு, இந்த கேள்விக்கு விடை இதோ இந்த ஆற்றை கடந்தால் மட்டுமே பெற முடியும் என்றார்.

அரசரோ அப்படியா அப்படியானால் நாம் அந்த பக்கமாக போகும்பொழுது அதனை பெற்றுக்கொள்வோம் என்றார்.ஆனால் துறவியோ அது இப்பொழுதே போனால் மட்டுமே கிடைக்கும்.எனவே என்னோடு ஆற்றைக் கடந்து வாருங்கள் என்றார்.இருவரும் ஆற்றைக் கடந்து ஒரு காட்டை வந்தைடைந்தனர்.அப்பொழுது துறவி இந்த காட்டிலேயே நான் அமர்ந்து தவம் செய்யப்போகின்றேன் எனவே நீங்கள் விரும்பினால் என்னோடு இருக்கலாம் இல்லையானால் நீங்கள் போகலாம் என்றார்.

அரசனோ நான் எப்படி உங்களோடு இருப்பது என்னை நம்பி ஒரு நாடு இருக்கின்றது.மேலும் எனக்கான பொறுப்புகளும் கடமைகளும் ஏறாலமாக அங்கு காத்திருக்கின்றது.எனவே என்னால் எப்படி உங்களோடு வர முடியும் என்றார்.அப்பொழுது துறவி "இது தான் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் என்றார்.நான் ஒரு துறவி நேற்று போல் எனக்கு இன்று இல்லை.இன்று போல் எனக்கு நாளை இல்லை.எனவே நான் காட்டில் அமர்ந்திருந்தாலும் என் மனம் ஒரே மாதிரிதான் இருக்கும்.அரன்மணையில் அமர்ந்திருந்தாலும் என் மனம் ஒரே மாதிரிதான் இருக்கும்.ஆனால் உங்கள் நிலை அப்படிப்பட்டதில்லை. எனவே நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள் நான் இனி உங்கள் அரன்மனைக்கு வரப்போவதில்லை என்றார்.

அதற்கு அரசனோ இல்லை இல்லை நான் உங்களை தவறாக எண்ணிவிட்டேன் தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள்.நீங்கள் என் அரன்மணைக்கு கட்டாயம் என்னோடு வந்தேயாக வேண்டும் என்று துறவியின் காலில் விழுந்து மன்னிப்பு  வேண்டினார்.ஆனால் துறவியோ இல்லை நான் உங்களோடு இப்பொழுது வந்தாலும் உங்கள் மனம் என்றாவது ஒரு நாள் திரும்பவும் அதே கேள்வியை தோற்றுவிக்கும்.எனவே நான் உங்கள் மன அமைதியை கெடுக்க விரும்பவில்லை.எனவே நான் திரும்பி வருவதை நீங்கள் எதிர்பார்க்காதீர்கள் எனக்கு இந்த உலகில் ஒரு மரத்தின் நிழல் போதும் என்று உறுதியாக கூறிவிட்டார்.

நீதி:

  •  பிறரைப்பற்றிய நம் எண்ணங்கள் பல சமயங்களில் தவறாகவே அமைந்துவிடும்.
  • யாரையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
  • இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலை உள்ளது.
  • இந்த உலகத்தில் ஒரு மரத்தின் நிழலே பெரும் மகிழ்ச்சிக்கு போதுமானது.

வெள்ளி, 1 அக்டோபர், 2021

இறைச்சி உண்பது குற்றமா?

முன்னுரை:

இன்று உலகில் பல நூறு கோடி மக்கள் ஒரு வேலை உணவிற்காக பசியிலும்,பஞ்சத்திலும் வாடிக்கொண்டிருக்கும் அதே நிலையில் மற்றொரு புறம் யாருடைய உணவு கலாச்சாரம் சிறந்தது என்று மிகப்பெரும் கலாச்சார போரே நடந்துகொண்டிருப்பது என்பது இந்த மனித சமூகத்தின் மீது வீசப்பட்ட சாபம் என்பதாகவே நான் கருதுகின்றேன்.மனிதன் உயிர் வாழ்வதற்கும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்வதற்கும் உணவு உட்கொண்ட காலம் கடந்து இப்பொழுது தன் இன,மத,கலாச்சார பெருமையை நிலை நாட்ட மட்டுமே உணவு உட்கொள்ளும் இழிநிலைக்கு தள்ளப்பட்டிருப்பது உண்மையில் காலத்தின் கொடுமையாகவே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் இன்று மனிதர்கள் சாப்பிடுவதிலும் கூட தங்களின் சுதந்திரங்களை இழந்து தங்களுக்கு பிடித்தமானதையும் கூட எவ்வித அறிவுப்பூர்வமான அடிப்படைகளுமற்ற கலாச்சார  வெளியுலகிற்காக மட்டுமே இது எனக்கு பிடிக்காது என்றும்,தனக்கு பிடிக்காததையும் கூட இந்த போலி உணவு கலாச்சார வெளியுலகிற்காக இது எனக்கு பிடித்தது என்றும் கூறி தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்வதை வெளிப்படையாகவே நம்மால் காண முடிகின்றது.

எனவே கலாச்சார அல்லது மத அடிப்படையிலான உணவு எப்படி தோன்றியது என்பது சம்மந்தமாகவும் நாம் சுதந்திரமான ஆரோக்கியமிக்க உணவு முறையை எப்படி தேர்ந்தெடுத்துக்கொள்வது என்பது சம்மந்தமாகவும் இந்த கட்டுரையில் விரிவாக விளக்கி இருக்கின்றேன்.நீங்களும் வாசித்து பயன்பெறுவதோடு ஏனைய நண்பர்களுக்கும் இதனை எத்தி வைக்கும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

உணவு கலாச்சாரம் எப்படி தோன்றியது?

மனிதனின் உணவு கலாச்சாரத்தில் கற்காலம் தொட்டு இக்காலம் வரை மாமிசம் என்பது ஒரு முக்கிய அங்கம் வகித்திருப்பதாகவே நம்மால் வரலாற்றில் காணமுடிகின்றது.இன்னும் சொல்லப்போனால் பல்வேறு பகுதிகளில் கால் நடைகள் அல்லது மீன்கள் போன்ற மாமிசத்தை உண்டாலே தவிர உயிர் வாழவே முடியாது என்ற நிலை அன்றிலிருந்து இன்று வரை இருக்கக்கூடிய நாடுகளையும் பகுதிகளையும் நம்மால் காண முடிகின்றது. அங்கெல்லாம் ஏனைய தாணிய மற்றும் காய்கறி உணவுகள் விளைவது கிடையாது என்பதே அங்கு மாமிசம் மட்டுமே பிரத்தியேக உணவாக ஆனதற்கு முக்கிய காரணியாகவும் பார்க்கப்படுகின்றது என்பதும் கவனிக்க தக்கதாகும்.

இந்தியா போன்ற சில நாடுகளில் தாணிய,காய்கறி உணவுகளும் மாமிச உணவுகளும் பெரும்பாலும் சமமான நிலையில் கிடைக்கப்பெற்றதால்  இப்பகுதியில் வாழும் பெரும்பான்மையான மக்கள் இரண்டையும் உண்ணுபவர்களாகவே இருந்திருக்கின்றனர் என்றே நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.குறிப்பாக இந்தியாவிற்குள்ளேயே பகுதிகளுக்கு தகுந்தவாறு  உணவு  பழக்க வழக்கங்கள் வேறுபட்டு இருந்ததாகவும் நம்மால் காண முடிகின்றது.

உதாரணமாக தெற்குப் பகுதியில் இருப்பவர்களுக்கு அரிசி விளைச்சல் அதிகமாக காணப்பட்டதால் அரிசியை மட்டுமே அவர்கள் தங்கள் பிரத்யேக உணவாகவும் வடக்கில் உள்ளவர்களுக்கு கோதுமையின் விளைச்சல் அதிகமாக காணப்பட்டதால் கோதுமையையே அவர்கள் தங்கள் பிரத்யேக உணவாகவும் ஆக்கிக்கொண்டுவிட்டனர் என்பதாகவே நம்மால் வரலாற்றின் மூலம் புரிந்துகொள்ளமுடிகின்றது.மேலும் ஆசிய கண்டத்தின் சில பகுதிகளில் சோழம் மற்றும் பருப்பு வகையிலான தாணியங்கள் பிரத்யேக உணவாக பார்க்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆக இந்த உலகில் ஒவ்வொரு பகுதிகளுக்கு தகுந்தவாறும் ஒவ்வொரு பகுதியிலுமுள்ள சீதோஷன நிலைக்கு தகுந்தவாறுமே மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் அமைந்திருந்ததே தவிர அங்கு மத அடிப்படையிலான உணவு என்று கூறுவதற்கோ அல்லது கலாச்சார அடிப்படையிலான உணவு என்று கூறுவதற்கோ எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றே இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

எனவே உணவு கலாச்சாரம் என்பது அந்தந்த பகுதிகளை கவனித்தும் அங்குள்ள சீதோஷன நிலையை கவனித்துமே இருந்தது என்பதை நாம் ஆழமாக உணர்ந்து கொண்டாலே போதுமானது.இன்றைய பெரும் பான்மையான கலாச்சார பிரச்சனைகளுக்கு நம்மால் தீர்வு கண்டுவிட முடியும் என்றே நான் கருதுகின்றேன்.அடுத்தபடியாக எத்தகைய உணவுமுறை சிறந்து என்பதில் மக்களிடம் பல்வேறு குழப்பங்கள் இருப்பதால் அது சம்மந்தமான ஒரு சில விளக்கங்களையும் இங்கு நாம் பார்த்துவிடுவோம்.

எத்தகைய உணவு முறையை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்?

என்னுடைய "முழுமை பெற்ற மனிதனாக இரு "என்ற புத்தகத்தில் ஆரோக்கியமே ஒரு மனிதனை முழுமை பெறச் செய்கின்றது என்ற தலைப்பின் கீழ் உணவு பழக்க வழக்கம் சம்மந்தமாக விரிவாக எழுதி இருக்கின்றேன்.முடிந்தால் அவற்றை ஒருமுறை வாசித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டு அவற்றில் முக்கியமான கருத்தை மட்டும் இங்கு பதிவிடுகின்றேன்.உலகில் இன்று பல்வேறு உணவுகள் பல சுவைகளில் உறுவாக்கப்பட்டிருந்தாலும் அவற்றிற்கு முக்கிய விதி என்பது இரண்டு தான்.

1.அது நமக்கு பிடித்தமான சுவையில் இருக்க வேண்டும்.

2.உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடாத சுத்தமான உணவாக அது இருக்க வேண்டும்.

இந்த இரண்டு பொதுவிதிகளுக்கும் உட்பட்ட எத்தகைய உணவானாலும் உண்ணலாம் என்பதே என்னுடைய கருத்தாகும்.இவற்றில் மாமிசம் பிரியமானவர்கள் அது தங்களின் ஆரோக்கியத்தை பாதிக்காது என்று உணர்ந்தால் அவற்றை தாராலமாக அவர்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். அவ்வாறே காய்கறி வகையான உணவை மட்டுமே விரும்புபவர்கள் அது தங்களின் ஆரோக்கியத்தை பாதிக்காது என்று உணர்ந்தால் அவற்றை அவர்கள் தாராலமாக சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இவற்றிற்கு மத்தியில் உணவு கலாச்சாரம் என்றும் உணவு பாரம்பரியம் என்றும் கூறிக்கொண்டு தனக்கு விருப்பமில்லாததை மற்றவர்களும் விரும்பக்கூடாது என்றோ அல்லது தனக்கு விருப்பமானதையே எல்லோரும் விரும்ப வேண்டும் என்றோ வற்புறுத்துவது என்பது மிக இழிவான செயல் என்பதை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
ஆக இறைச்சியோ,காய்கறியோ அவரவரின் விருப்பத்திற்கேற்பவும் அவரவரின் உடல் நிலைக்கு ஏற்பவும் தேர்ந்தெடுத்துக்கொள்வதே ஒரு சிறந்த உணவுமுறையாக இருக்குமே தவிர ஒருவருடைய உணவு பழக்கத்தை மற்றொருவரிடம் மதத்தின் பெயராலோ அல்லது கலாச்சாரத்தின் பெயராலோ புகுத்த நினைப்பது என்பது அநாகரீகத்தின் உச்சமேயன்றி வேறில்லை என்றே நான் காண்கின்றேன்.

அடுத்தபடியாக இறைச்சி என்பது பெரும்பாலும் அசுத்தமாக பார்க்கப்படுகின்றதே அப்படியானால் அனைத்து இறைச்சிகளையும் உண்ணலாமா..?என்று சிலர் கேட்கின்றனர்.எனவே அது சம்மந்தமாகவும் ஒரு சில விளக்கங்களை இங்கு பதிவு செய்வதற்கு விரும்புகின்றேன்.

அனைத்து இறைச்சிகளையும் உண்ணலாமா..?

இந்த உலகில் மனிதன் ஒன்றை தன் உணவாக எடுத்துக் கொள்வதற்கு முதல் விதியே அது சுத்தமானதாக இருக்க வேண்டும் என்பதையே நான் பல்வேறு இடங்களிலும் குறிப்பிட்டுவருகின்றேன்.எனவே அது இறைச்சியானாலும் சரி,அல்லது அது காய்கறியானாலும் சரி, அது சுத்தமானதாக இருந்தால் மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.மேலும் அசுத்தத்தை மட்டுமே உண்ணுகின்ற அல்லது பார்ப்பதற்கே அறுவறுப்பாக தோன்றும் பிராணிகளின் இறைச்சிகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகின்றேன்.எவ்வாறு விஷச்செடிகளை விட்டும் நாம் தவிர்ந்து கொள்கின்றோமோ அது போன்றே இத்தகைய மாமிசங்களை விட்டும் தவிர்ந்து கொள்வதும் சிறந்தது என்றே நான் கருதுகின்றேன்.

எனவே அனைத்து இறைச்சிகளையும் உண்ணலாமா என்று கேட்டால் என்னைப் பொறுத்தமட்டில் உடலுக்கு தீங்கை தரும் இன்னும் அறுவறுப்பாக காணப்படும் நிலையில் உள்ள இறைச்சிகளை தவிர்ந்து கொள்வதே சிறந்தது என்பதே எனது கண்ணோட்டமாகும்.அடுத்தபடியாக கட்டுரையின் இறுதி பகுதிக்கும் வருவோம்.அதாவது இறைச்சி என்றவுடனே இந்தியாவில் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மாட்டிறைச்சியாகவே உள்ளது. எனவே அது சம்மந்தமாகவும் இங்கு ஒருசில விஷயங்களை பார்த்துவிடுவோம்.

மாட்டிறைச்சி உண்ணலாமா..?

மாடு என்பது உண்மையில் இந்த மனித சமூகத்திற்கு பல்வேறு விதங்களில் உறுதுணையாக இருக்கும் ஒரு சிறந்த பிராணி என்பதை இங்கு முதலில் நான் நினைவூட்டிக்கொள்ள விரும்புகின்றேன்.இன்னும் சொல்லப்போனால் அது விவசாயிகள் மற்றும் பால்காரர்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒரு செல்லப்பிராணி என்று கூறினாலும் கூட அது மிகையாகாது என்றே நான் கருதுகின்றேன்.

அத்தகைய ஒரு பிராணியை அவர்கள் அளவு கடந்து நேசிப்பதால் அவற்றையே கடவுளாகவும் புனிதப்படுத்திப்பார்க்கின்றனர்.இது அவர்களின்  தனிப்பட்ட பிரியம் என்பதாக நாம் எடுத்துக் கொண்டாலும் அவற்றை எல்லோரும் அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று ஏனையோரையும் வலியுறுத்த நினைப்பது என்பதிலிருந்து தான்  பிரச்சனையே உறுவெடுக்கின்றது.ஏனெனில் அவர்கள் நினைப்பது போன்றே ஒரு ஆடு வளர்ப்பவர் தன் ஆட்டை அளவு கடந்து நேசிக்கின்றார் என்பதற்காக அதனை இனி யாரும் உண்ணக்கூடாது என்று கூறத்தொடங்களாம்.இது போன்றே உலகில் உள்ள ஒவ்வொரு பொருளின் புனிதத்தையும் காரணம் காட்டி ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இன்ன பொருளை உண்ணக்கூடாது என்று வற்புறுத்தத் தொடங்கினால் பிறகு உலகில் மனிதன் எதனையும் உண்ணவே முடியாமல் போய்விடுவான்.

எனவே மாட்டை நேசிப்பவர்கள் அல்லது மாட்டிறைச்சி உண்பதை வெறுப்பவர்கள் தாங்கள் அதனை செய்யாமல் தவிர்ந்துகொள்வதுதான் சிறந்ததே தவிர ஏனையோரையும் வற்புறுத்துவது என்பது அநாகரீகத்தின் உச்சம் என்பதை தயவு கூர்ந்து புரிந்துகொள்ளும்படி பணிவண்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.அவ்வாறே குறிப்பிட்ட சிலர் மாட்டை புனிதமாக பார்க்கின்றார்கள் எனில் அவர்களுக்கு முன்பு மாட்டிறைச்சியை தவிர்த்துக் கொள்வது என்பதே அதனை உண்பவர்களுக்கும் சிறந்த பண்பாக அமையும் என்பதையும் இங்கு நான் சுட்டிக்காண்பித்துக் கொள்கின்றேன்..!ஆக மாட்டிறைச்சி உண்ணலாமா? என்று என்னிடம் கேட்டால் அதை உண்ணுவதும் உண்ணாமல் போவதும் அவரவரின் விருப்பம் என்று தான் நான் கூறுவேன், என்றாலும் நாம் அவற்றை உண்ணுவதால் ஒருவருடைய மனம் புன்படுகின்றது என்பதை உணர்ந்தால் அச்சமயம் கட்டாயம் அதனை தவிர்ந்து கொள்வதே சிறந்தது என்றே நான் கருதுகின்றேன்.

நன்றி:

எழுத்தாளர்:

அ.சதாம் உசேன் ஹஸனி

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

திருந்துவதற்கு வாய்ப்பளியுங்கள்

வாழ்வில் பல்வேறு ஏமாற்றங்களுக்கு ஆளான ஒருவன் தன் கண்ணில் படும் 1000 நபர்களின் தலையை கொய்துவிடப் போவதாக சபதம் எடுத்துக் கொண்டான்.இதனை கேள்விபட்ட மக்கள் அவனை தூரத்தில் கண்டாலே ஓடி ஒழிந்துவிடுவார்கள்.அப்படி இவனை தெரியாத யாராவது இவன் அருகில் வந்துவிட்டால் அவர்களின் தலையை வெட்டிவிடுவான்.மேலும் எத்தனை நபர்களை கொலைசெய்திருக்கின்றான் என்ற கணக்கிற்காக அவர்களின் கட்டை விரலையும் வெட்டி அதனை ஒரு மாலையாக செய்து கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டான்.

இதனாலேயே மக்கள் அவனுக்கு "உங்லி மால்""விரல் மாலைக்காரன்"என்று பெயரும் வைத்திருந்தனர்.உங்லிமால் ஊருக்குள் வருகின்றான் என்று கேள்விபட்டால் அந்த ஊரில் யாரும் வெளியே தலை நீட்டமாட்டார்கள் என்ற நிலை இருந்தது.அரசனும் கூட அவனுக்கு பயந்து பெரும்பாலும் வெளியே வராமல் இருந்தார் என்றே மக்களிடம் பேசப்பட்டது.உங்லிமால் தன்னுடைய சபத்தத்தை நிறைவேற்றுவதில் இறுதி கட்டத்தை அடைந்திருந்தான்.அதாவது 999 தலைகளை வெற்றிகரமாக கொய்து இருந்தான்.ஆனால் இன்னும் ஒரு தலைக்காக அவன் எப்பொழுதும் அமர்ந்திருக்கும் பாதையில் அமர்ந்து ஆவலோடு காத்திருந்தான்.அவனுக்கு கிடைத்ததோ மிகப்பெரும் ஆச்சர்யம்.
ஆம்...!

அவ்வழியாக எதார்த்தமாக புத்தபெருமான் தன் சிஷியர்களுடன் அரசரை சந்திக்கவந்தார்.தூரத்தில் அமர்ந்திருந்த உங்லிமாலுக்கு மிகப்பெரும் சந்தோஷம்,தன்னுடைய சபதத்தை நிறைவேற்றும் நேரம் வந்துவிட்டது என்று வெகுதூரத்திலிருந்து தன்னை நோக்கி வந்த சிறிய கூட்டத்தைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டான்.இடைபட்ட நேரத்தில் அவ்வூரின் சில முக்கியஸ்தர்கள் புத்தரின் சீடர்களிடம் விஷயத்தை சொன்னவுடன். சிஷியர்களும் பதறியடித்துக் கொண்டு விஷயத்தை புத்தரிடம் கூறினார்கள்.

புத்தர் அவ்விஷயங்களுக்கு காதுதாழ்த்திவிட்டு தொடர்ந்து உங்லிமால் இருந்த வழியிலேயே நடந்துகொண்டிருந்தார்.சீடர்களோ வெளவெளத்துப்போய் வேறு வழியில் நாம் சென்றுவிடலாமே என்று புத்தரிடம் வேண்டினார்கள்.ஆனால் புத்தரோ உங்லிமால் ஒரே ஒரு தலைக்காகத்தான் காத்திருக்கின்றான் என்பதை என்னிடம் நீங்கள் கூறாமல் இருந்திருந்தால் நான் உங்களோடு வந்திருப்பேன்.ஆனால் இப்பொழுது என்னால் அப்படி வரமுடியாது என்று கூறிவிட்டார்.வேறு வழியின்றி சீடர்களும் தங்களின் மகத்தான குருவை தனியாக விடமுடியாதே என்ற கட்டாயத்தில் புத்தருடனே நடக்கத் தொடங்கினார்கள்.

புத்தர் உங்லிமாலின் அருகில்வர ஆரம்பித்தார்.உங்லிமாலும் தன் வாலை உறுவிநின்றான்.ஆனால் புத்தர் அருகில் வரவர புத்தருடைய சலனமில்லா நடையும் அவரின் மலர்ந்த முகமும் ஒளிகள் வீசும்பார்வையும் 999 தலைகளை இறக்கமின்றி கொய்த அந்த கல்நெஞ்சக்கார உங்லிமாலையும் ஒரு கனம் செயலற்று சிந்திக்க வைத்தது.இத்துனை அமைதியான சாந்தம் நிறைந்த ஒரு முகத்தை இது நாள் வரை நான் கண்டதில்லையே.

இதை எப்படி என்னால் கொய்யமுடியும் என்று தனக்குள்ளே புலம்பிக்கொண்டிருந்த உங்லிமால் புத்தரை நோக்கி அங்கேயே நில் என்றான். ஆனால் புத்தர் அதனை கண்டுகொள்ளாமல் அவனை நோக்கி நடந்து கொண்டே சென்றார்.மீண்டும் உங்லிமால் "இதோ பார் உன்னை பார்த்தால் எனக்கு மிகப்பரிதாபமாக இருக்கின்றது"எனவே உன்னை நான் உயிரோடு விட்டுவிடுகின்றேன்.இத்தோடு வேறு வழியில் திரும்பி சென்றுவிடு என்று கர்ஜித்தான்.

ஆனால் புத்தரோ அதனை பொருட்படுத்தவே இல்லாமல் அவன் வால் அருகில் சென்று "உங்லிமாலே நானும் உன் மீது பரிதாபப்பட்டுதான் வந்திருக்கின்றேன்.உன்னுடைய சபதத்தை தீர்ப்பதற்கு இன்னும் ஒரே ஒரு தலை தான் மிச்சம் இருக்கின்றதாமே அதற்காக நீ பல வருடமாக காத்திருக்கின்றாய் என்றும் நான் கேள்விபட்டேன்.எனவே பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட,மேலும் எதற்கும் உதவாத என் தலையை நீ எடுத்துக்கொள் என்றார்.

அதனை கேட்ட உங்லிமால் நீர் வசீகரம்மிக்க மனிதராக இருப்பதோடு சற்று பைத்தியக்காரராகவும் இருப்பீர்போலையே என்று கூறி தன் வாலின் கூர்மையை காட்டி இது உன் தலையை துண்டித்துவிடும் என்பதை நீ அஞ்சவில்லையா..?என்றான்.எவ்வித ஆசைகளுமற்ற ஒரு மனிதனாக நான் என்று மாறினேனோ அன்றிலிருந்து நான் எதற்கும் அஞ்சுவதில்லை.ஆனால் நான் இறக்க இருக்கும் இத்தருனத்தில்  என் மனதில் இப்படி ஒரு ஆசை உதிக்கின்றது அதனை நீ நிறைவேற்றி வைப்பாயா என்றார் புத்தர்..!

உடனே உங்லிமாலும் என்ன ஆசை என்று சொல் என்னால் நிறைவேற்ற முடிகின்றதா என்று பார்க்கின்றேன் என்றான்.புத்தரோ "இதோ இந்த மரத்தின் கிளையை வெட்டு என்றார்.உடனே தன் கூர்மையான வாளால் அக்கிளையை வெட்டி புத்தரின் கையில் கொடுத்துவிட்டு ..!நீ உண்மையில் பைத்தியக்காரர்தான் என்பதை உன்னுடைய இந்த ஆசையே கூறுகின்றது என்றான்.உடனே புத்தர் இல்லை இது என் ஆசையின் ஒரு பகுதிதான் அதை நீ நிறைவேற்றிவிட்டாய் ஆனால் இந்த கிளையை நீ மீண்டும் அது இருந்த இடத்தில் ஒட்டி நீ என் முழு ஆசையையும் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்றார்.

உடனே உங்லிமால் அட பைத்தியாகரனே இதை எப்படி திரும்பவும் ஒட்ட முடியும் என்றான்.அப்பொழுது புத்தர் ஆம்...!உன்னால் அதனை ஒட்ட முடியாதெனில் அதனை வெட்டவும் உனக்கு உரிமை இல்லைதானே என்றார்..?வெட்டுவதால் நீ வீரன் என்பதாக எண்ணிக்கொண்டிருக்கின்றாயா...? அதனை குழந்தையும் கூட செய்யுமே என்று கூறி நீ உண்மையான வீரனாக இருந்தால் இதோ இந்த கிளையை ஒட்ட வை என்றார்.உங்லிமால் அது முடியாத காரியம் என்றார்.

உடனே புத்தர் அப்படியானால் உன்னுடைய இந்த விரல் மாலைகளையும், வாலையும் தூக்கி எறிந்துவிடு.இவைகள் ஒரு வீரமான நபருக்கு அழகல்ல. இவைகள் கோழைகள் தங்கள் கோழைத்தனத்தை மறைத்துக் கொள்வதற்காக வைத்திருப்பவைகள் என்று கூறி நீ என்னோடு வா நான் உன்னை உண்மையான வீரனாக்குகின்றேன் என்றார்.என்னால் உங்கள் உயர்ந்த நன்நோக்கத்தை உணர்ந்துகொள்ள முடிகின்றது.உண்மையில் நான் பார்த்த நபர்களிலேயே மிக துனிச்சலான வீரர் நீங்கள்தான் தயவு கூர்ந்து என்னையும் உங்கள் சீடனாக்கிக் கொள்லுங்கள் என்று மன்றாடினான். புத்தரும் தன்னுடன் அவரை அழைத்துக் கொண்டு அரசவைக்கு சென்றார்.

அந்த மக்களிடமெல்லாம் உங்லிமால் புத்தருடன் அரசவைக்கு சென்றிருப்பதாக செய்தி பரவியது.அரசரும் செய்தியை கேள்விபட்டு திடுக்கிட்டுப்போனார்.புத்தர் அரசைவியின் முக்கிய பகுதியில் ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது அரசர் உங்லிமாலுக்கு பயந்து வாலுடன் வருகை தந்தார்.இதனை கண்ட புத்தர் இங்கு வால் ஏதும் தேவை இல்லையே என்றார். அரசர் புத்தரிடம் நலம் விசாரித்து விட்டு இங்கு யார் அந்த உங்லிமால் என்று சற்று பதட்டத்துடன் கேட்டார்.

அப்பொழுது புத்தரோ அவன் இப்பொழுது ஒரு அப்பாவியான துறவி.இனி அவன் யாரையும் துன்புறுத்தமாட்டான் என்றார்.ஆனாலும் அரசர் யார் அவன் எனக்கு அவனை காண்பியுங்கள் அவனுடைய பெயரே மிக அபாயகரமானதாக உள்ளதே என்று வாளை வெளியில் உறுவி படபடத்துநின்றார்.புத்தர் புன்னகைத்துக் கொண்டே தன் அருகில் சாந்தமாக அமர்ந்திருக்கும் ஒரு மனிதனை சுட்டிக்காண்பித்து இதோ இவன் தான் உங்லிமால் என்றார்.அரசர் அவனை சண்டைக்கு அழைப்பதுபோல் எல்லோரையும் வெட்டிவிடுவாயா நீ? என்று வாளை அவனிடம் நீட்டினார்.

அப்பொழுது உங்லிமாலோ சிறித்துக் கொண்டே நீ மாபெரும் வாள்வீரனாக இருந்திருந்தால் நான் உங்லிமாலாக இருந்தபோது என்னிடம் நீ வந்திருக்க வேண்டும்.இப்பொழுது நான் யாருடைய உயிறையும் பறிப்பவன் அல்ல,பல மனிதருக்கு அதனை வழங்க ஆசிப்பவன் என்று கூறி நீ  உன் வாளை உன் உறைக்குள் வை என்றான்.அரசனும் அவ்வாறே செய்துவிட்டு கடந்து சென்றுவிட்டார்...!

 நீதி:

  • வாழ்வில் ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும் அவர்களை சீர்செய்ய ஒரு வாய்ப்பையேனும் வழங்க வேண்டும்..!

சனி, 25 செப்டம்பர், 2021

மனிதனின் மனஅமைதி எங்கே இருக்கின்றது?

ஒரு விவசாயி பக்கத்தில் உள்ள காட்டில் சென்று மரம் வெட்டிவந்து அதனை விற்று தன் வாழ்வை கழித்து வந்தான்.இப்படி ஒவ்வொரு நாளும் அவன் அக்காட்டு வழியாக கடந்து செல்லும்போது ஒரு மரத்தடியின் கீழ் ஒரு துறவி ஆழ்ந்த தியானத்தில் இருப்பதையும் பார்த்துக்கொண்டே கடந்துசென்றான். ஒரு நாள் தன் வாழ்வில் எதுவுமற்ற வெறுட்சியை உணர்ந்த விவசாயி அத்துறவியிடம் தன் வாழ்கையில் செல்வம் பெற்றவனாக ஆவதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்கலாமே என்று யோசித்துக்கொண்டு அத்துறவியை நெருங்கினான்.

தியானத்தில் இருந்த துறவியை மெல்லிய குரலில் அழைத்து ஐயா நான் வாழ்வில் செல்வம் பெற்று உயர்வாக வாழ ஏதேனும் வழி உண்டா என்றான். கண்களை மெல்லமாக திறந்த துறவி இதோ இந்த பக்கமாக மரங்களை பார்த்துக்கொண்டே நடந்துசெல் என்றார்.உடனே அவ்விவசாயியும் துறவியின் பேச்சை தட்டக்கூடாது என்பதற்காகவே மரங்களை பார்த்துக்கொண்டே தூரமாக நடக்க ஆரம்பித்தான்.

நீண்ட தூரம் கடந்த பின்பு சந்தன மரங்கள் நிறைந்த ஒரு காட்டை அடைந்தான்.இதற்கு முன்பு அக்காட்டில் பலமுறை கடந்து வந்திருந்தாலும் இதனை கவனிக்கவில்லையே என்று வருந்திக்கொண்டே அம்மரங்களை வெட்டிவீழ்த்தினான்.பிறகு அதனை விற்று அவனுடைய ஊரிலேயே மிகப்பெரும் செல்வந்தனானான்.சிறிது காலம் தான்அனுபவிக்காத அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்தான்.பிறகு அனைத்தும் சலித்துப்போனது. அதைவிட பெரும் செல்வந்தனாக ஆக வேண்டும் என்று விரும்பினான்.எனவே மீண்டும் அத்துறவியை சந்திக்கச்சென்றான்.எப்பொழுதும்போல் துறவி அம்மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

விவசாயியோ ஐயா என் வாழ்வில் இதைவிட பெரிய செல்வந்தனாக ஏதேனும் வழி உண்டா என்றான்.மீண்டும் துறவி மெல்லமாக கண்களை திறந்து இதோ இவ்வழியாக கீழே பார்த்துக்கொண்டே செல் என்றார்.அவனும் கேட்ட மாத்திரத்திலேயே கீழே பார்த்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டான்.நீண்ட தூரம் கடந்த பிறகு ஒரு சிறிய குகையை அடைந்தான். அங்குள்ள பாறைகள் முழுவதும் தங்கத்தால் மின்னியது.அட இத்தனை நாள் இந்த காட்டை சுற்றிவருகின்றேன் இது தெறியாமல் போய்விட்டதே என்று எண்ணிக்கொண்டு அத்தங்கங்களை கட்டியாக்க முற்பட்டான்.பிறகு அதனை விற்று மிகப்பெரும் கோடீஸ்வரனாக ஆகிவிட்டான்.

சிறிது காலம் தன் மனதில் புதைந்து கிடந்த அனைத்து அபிலாஷைகளையும் நிறைவேற்றிக்கொண்டான்.பிறகு முன்பைப்போல் மீண்டும் மனதில் வெறுட்சி தோன்ற ஆரம்பித்தது.அனைத்திலும் சலிப்பு ஏற்பட்டது.எனவே எப்பொழுதும் போல் அத்துறவியின் நினைவு வந்தது.துறவியை நோக்கி நடக்கலானான். துறவியும் எப்பொழுதும்போல் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.விவசாயியோ மெல்லமாக துறவியின் அருகில் சென்று ஐயா இப்பொழுது இருப்பதைவிட இன்னும் மிகப்பெரிய செல்வந்தனாக நான் ஆவதற்கு ஏதேனும் வழியிருக்கின்றதா என்றான்.

மெல்லமாக கண்களை திறந்த துறவி இதோ இந்த ஆற்றின் ஓரமாகவே நடந்து செல் என்றார்.உடனே விவசாயி விருவிருவென நடக்கத் தொடங்கினான். நீண்ட தூரம் கடந்த பின்பு அந்த ஆற்றின் ஓரத்தில் சில வைரவைடூரிய கற்கள் கிடப்பதை பார்த்தான்.அட என்ன ஆச்சர்யம் இந்த கற்களை நான் வாழ்நாட்கலிலேயே அணிந்ததில்லையே என்று எண்ணிக்கொண்டு அவற்றை பொறுக்கி எடுத்துக்கொண்டான்.அவற்றில் சிலவற்றை அணிந்து கொண்டு மீதியை மிகப்பெரும் தொகைக்கு விற்றான்.

சிறிது காலம் எல்லா சுகங்களையும் அனுபவித்தான்.ஆனால் இயற்கை அவனை திரும்பவும் இயல்பு நிலைக்கு அழைத்தது.எல்லா வசதிகள் இருந்தும் மனதில் ஏதோ ஒரு வெறுட்சி துரத்துவதை உணர்ந்தான்.சரி மீண்டும் துறவியிடம் செல்வோம் என்று யோசித்தபோது அவனுடைய மனதில் இப்படி ஒரு எண்ணமும் தோன்றியது.அதாவது வைர முத்துக்கள் மற்றும் தங்க சுரங்கம் மற்றும் சந்தனக்காடு இவை எல்லாம் இருக்கும் இடங்கள் அனைத்தையும் தெரிந்தும் இந்த துறவி ஏன் அவற்றை எடுத்து அனுபவிக்காமல் இருந்தார் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

தலையே சுற்றியது.சரி கட்டாயம் இதனை துறவியிடம் கேட்டால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்பதை உணர்ந்த விவசாயி துறவியை நோக்கி நடந்தான்.துறவி எப்பொழுதும்போல் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.அங்கு வந்த விவசாயியோ துறவியை மெல்லிய குரலில் அழைத்து ஐயா இன்று நான் உங்களிடம் ஒரு விளக்கம் கேட்டுச்செல்ல வந்திருக்கின்றேன் என்றான். துறவியும் கண்களை விழித்து, கேள்! என்றார்.ஐயா நீங்கள் ஏன் சந்தனக் காடுகளையும் தங்க சுரங்கத்தையும் வைர முத்துக்களையும் உங்களுக்காக எடுத்துக்கொள்ளவில்லை என்பதே எனது கேள்வியாகும் என்றான் விவசாயி.

அதற்கு துறவியோ புன்னகைத்துக்கொண்டே "நான் அதனைவிடவும் மேலான "மன அமைதியை" அடைந்துவிட்டேன்."எனவே நீ உயர்வாக பார்க்கும் அப்பொருட்கள் எனக்கு எத்தேவையுமற்றது என்றார் துறவி.துறவியின் பதிலை கேட்ட மாத்திரமே விவாசாயி அவருடைய கரங்களை பற்றிக்கொண்டு ஐயா எனக்கும் அந்த மனஅமைதியை தரும் வழியை கற்றுக்கொடுங்கள் என்று மன்றாடினான்.அப்பொழுது துறவியும் அதனை அவனுக்கு கற்றுக் கொடுக்க ஒப்புக்கொண்டார்.!

நீதி:

  • இந்த உலகில் மன அமைதியை விட விலை உயர்ந்தது வேறொன்றுமில்லை.
  • இந்த உலகில் அனைத்தும் ஒரு கட்டத்தில் சலிப்பை தந்துவிடுவதே.
  • அடையும் வரைக்கும்தான் செல்வம் சுகமானது.
  • மன அமைதி என்பது பாதுகாக்கப்பட வேண்டியது.
  • மன அமைதி என்பது ஆழ்ந்த அமைதியால் பெறப்படக் கூடிய அற்புத நிலை.

புதன், 22 செப்டம்பர், 2021

உங்கள் மனம் தேவையற்ற தீர்மானம் செய்கிறதா?

முன்னுரை:

இன்றைக்கு மனிதர்களிடம் காணப்படும் குணங்களிலேயே மிக ஆபத்தான குணம் தேவையற்ற தீர்மானம் செய்வதுதான் என்றே நான் கருதுகின்றேன். எந்த அவசியமும் இல்லாத இடங்களிலும் கூட மனிதர்களில் பெரும் பாலானோர் தேவையற்ற தீர்மானங்களை தேடுவதையும், அதில் ஈடுபடுவதையும் காணும்பொழுது எனக்கு மிக பரிதாபமாகவே உள்ளது. அத்தகைய நிலையைக்கொண்ட மூன்று ஜென் துறவிகளின் ஒரு நிகழ்வை இங்கு நான் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகின்றேன்.அது நிச்சயம் நம் போன்ற தேவையற்ற தீர்மானங்களை தேடும் மனிதர்களுக்கு மிக பிரயோஜனம் மிக்கதாக இருக்கும் என்றும் நம்புகின்றேன்.

"மூன்று ஜென் துறவிகள் காலை பொழுதில் எப்பொழுதும் போல் நடை பயிற்சிக்காக அருகில் உள்ள காட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.அப்பொழுது எதார்த்தமாக அந்த காட்டில் இருந்த மலை உச்சியில் தங்கள் முந்தைய ஆசிரியரான ஒரு ஜென் துறவி நிற்பதை மூவரும் காண்கின்றனர்.அவரை கண்டவுடனே மூவரில் ஒருவர் நம் ஆசிரியர் யாரையோ எதிர்பார்த்து நிற்பதை போன்று தெரிகின்றதே என்றார்.
அதனைக்கேட்ட மற்றொருவர் இல்லை!இல்லை.!அவர் எதோ ஒன்றை தொலைத்துவிட்டு மலையின் உச்சியில் நின்று தேடுகின்றார் என்றே நான் நினைக்கின்றேன் என்றார்.

அதனைக் கேட்ட மூன்றாமவரோ இல்லை!இல்லை..!அவர் அங்கு நின்று தியானம் செய்துகொண்டிருக்கின்றார்.ஏனெனில் அவரிடம் எந்த அசைவும் காணப்படவில்லை என்று கூறி முடித்தார்..!இப்பொழுது மூவருக்கும் தங்கள் ஆசிரியர் என்ன செய்துகொண்டிருக்கின்றார் என்பதில் கருத்து வேறுபாடு முத்தியது.வேறு வழியே இன்றி இப்பொழுது ஆசிரியரையே நேராக சென்று சந்தித்து பிரச்சசனையை தீர்ப்பதாக முடிவு செய்யப்பட்டது.

தாங்கள் எதற்கு வந்தார்களோ அவற்றை எல்லாம் மறந்துவிட்டு,மலை உச்சிக்கு சென்றால் தாங்கள் செய்ய வேண்டிய அடுத்த வேலைகளெல்லாம் நின்றுபோகும் என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சிரமத்தோடு மலை உச்சியை அடைந்தார்கள்.அப்பொழுது அரை கண்ணை மட்டும் திறந்த நிலையில் ஆசிரியர் நின்று கொண்டிருப்பதைக்கண்டனர்.ஆனாலும் முதலாமவருக்கோ தன் கருத்துதான் சரி என்று நிறூபிக்கப்பட வேண்டும் என்ற பேராவல் இருந்ததால் அவர் மெல்லமாக ஆசிரியரை அழைத்தார். ஆசிரியரும் என்ன கூறுங்கள் என்றார்.அதற்கு முதலாமவர் ஐயா நீங்கள் இங்கு யாரையோ தேடி வந்திருக்கின்றீர்கள் அப்படித்தானே என்றார்.

அதற்கு துறவியோ எனக்கு இந்த உலகில் யாரும் இல்லையே நான் யாரை தேடப்போகின்றேன் நான் தனியாகவே இந்த உலகிற்கு வந்தேன் தனியாகவே போவேன் என்பதை நான் நன்றாக அறிவேன் எனவே இங்கு நான் யாரையும் தேடவேண்டிய அவசியமில்லையே என்றார்.அதனைக்கேட்ட இரண்டாமவர் தன்னுடைய முடிவுதான் சரியானது என்று எண்ணிக்கொண்டு அப்படியானால் நீங்கள் உங்களுடைய கால் நடைகளில் ஏதோ ஒன்றை தொலைத்து விட்டு மேலிருந்து தேடுகின்றீர்கள் அப்படித்தானே என்றார்.

அதற்கும் துறவி இங்கு என்னுடைய பொருள் என்று எதுவுமே இல்லை என்றிருக்கும் பொழுது நான் எப்படி என்னை விட்டும் தொலைந்த பொருளை தேடுவேன்?எனவே நான் எந்த பொருளையும் தேடவில்லை என்று பதிலளித்தார்.பிறகு மூன்றாமவருக்கோ மிக்கமகிழ்ச்சி ஏனென்றால் ஆசிரியர் தியானத்தில் இருப்பதாக தான் கருதியதுதான் உண்மை என்று எண்ணிக்கொண்டு "அப்படியானால் நீங்கள் இங்கு தியானம் செய்கின்றீகள்தானே என்றார்.

அதற்கு துறவியோ உனக்கு தெரியாதா?தியானம் என்பது எல்லா நிலையிலும் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம் என்று.அதனை நான் நம் மடத்திலேயே செய்துவிட்டேன்.இப்பொழுது நான் ஏதுமற்ற நிலையில் இருக்கின்றேன்.நான் யார் எனக்குள் என்னவெல்லாம் இருக்கின்றது என்பதையெல்லாம் மறந்து ஒரு காலிப்பாத்திரமாக இருக்கின்றேன்.இத்தகைய நிலைதான் புத்தர்களால் போற்றி புகழப்பட்ட நிலை.எனவே இது தியானமும் இல்லை என்றார்.மூவரின் முகமும் வாடிப்போனது.தங்களின் தேவையற்ற தீர்மானங்கள் அனைத்தும் பொய்யாய் போனதை உணர்ந்துகொண்டார்கள்.அப்பொழுது துறவியோ மக்களின் நிலையை முடிவு செய்வதை விடுத்துவிட்டு உங்கள் காரியங்களில் ஈடுபடுங்கள்.அதுதான் உங்களுக்கு தீர்க்கமான தீர்வை தருவதற்கு மிக உகந்தது என்று உபதேசித்து அவர்களை அனுப்பி வைத்தார்.

நீதி:

  • அடுத்தவர்களின் காரியத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.
  • பிறரின் செயலுக்கு வடிவம் கொடுக்காதீர்கள்.
  • நிச்சயமற்ற ஒன்றிற்காக உங்கள் சக்தியை வீணடிக்காதீர்கள்.
  • தேவையற்ற இடங்களில் உங்கள் கருத்தை நிறூபிக்க விரும்பாதீர்கள்.
  • தேவையற்ற விஷயத்தை உங்கள் தோளில் சுமக்காதீர்கள்.
  • உங்கள் காரியத்தில் ஈடுபாட்டுடன் செயல்படுங்கள்.