செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

பழம் நிறைந்த மரமே கல் அடிபடும்.(Be a good Tree)

பழம் நிறைந்த மரமே கல் அடிபடும்
பழம் நிறைந்த மரமே கல் அடிபடும்

கிராமத்தின் எல்லையில் ஒரு துறவி இருந்தார்.மக்கள் அவரிடம் அவ்வப்பொழுது சென்று சில நல்லுபதேசங்களை செவிமடுத்து வருவது வழக்கமாக இருந்தது.ஒரு நாள் அக்கிராமத்தில் சிறந்த கல்வியாளராகவும், பண்பாலராகவும் திகழ்ந்து வந்த ஒரு வாளிபன் அத்துறவியை சந்தித்து "தன்னை இந்த ஊர் மக்களில் சிலர் மிக மோசமானவன் என்றும் பிரயோஜனமற்றவன் என்றும் தூற்றிக்கொண்டே இருக்கின்றனர்"அது எனக்கு மிக வருத்தத்தை தருகின்றது.எனவே நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்..!

அதற்கு அத்துறவியோ புன்னகைத்துக்கொண்டே நீ என்னிடம் வந்த பாதையில் இரண்டு மாமரங்களை கடந்து வந்தாயா என்று கேட்டார் .உடனே அவ்வாலிபனும் ஆம் அதனை கடந்துதான் வந்தேன் என்றார்.!அம்மரத்தின் அடியில் யாரையும் கண்டாயா என்று கேட்டார்.அதற்கு அவ்வாலிபன் ஆம் "ஒரு மரத்தின் அடியில் நிறைய சிறுவர்கள் கூடி நின்று கற்களை எறிந்து மாங்கனியை பறித்துக்கொண்டிருந்தார்கள்.மற்றொரு மரமோ யாருமற்ற காலியிடமாக கிடந்தது என்று பதிலளித்தான்.

சற்றும் தாமதமின்றி "இதனைப்போன்றுதான் நீயும்" என்றார் துறவி.உன்னிடம் நற்பண்புகளும்,நற்சிந்தனைகளும் இருக்கும் காலெமெல்லாம் உன்னை நோக்கி சில மக்கள் கல்எறிந்து கொண்டேதான் இருப்பார்கள்."நன்றாக நினைவில் வைத்துக்கொள் "உன் மீது காழ்புணர்ச்சியிலும்,பொறாமையிலும் சிலர் கல் எறிகின்றார்கள் என்றால் நீ பழங்கள் நிறைந்த மரமாக இருக்கின்றாய் என்பதை உணர்ந்துகொள் என்று அவ்வாலிபனுக்கு அத்துறவி உபதேசித்தார்..!அவ்வாலிபனும் அத்துறவியின் அந்த உண்மையான வார்த்தைகளை செவிமடுத்து மனம்நெகிழ்ந்து விடைபெற்றான்.

நீதி :

 1.ஒவ்வொரு ஊரிலும் நான்கு பேர் உங்களை இழிவாக பேச காத்துக் கொண்டேதான் இருப்பார்கள்.

2.நீங்கள் உயர்ந்த மனிதர் என்பதற்கு காழ்புணர்ச்சியாளார்களும், பொறாமைகாரர்களுமே சிறந்த அடையாளம்.

3.காழ்புணர்சியாளார்களையும்,பொறாமைகாரர்களையும் கண்டுகொள்ளவே தேவையில்லை.அவர்களின் வார்த்தைகளுக்கும் மதிப்பளிக்க தேவையில்லை.

4.உங்களுடைய இலட்சியத்தை நோக்கி நடைபோட்டுக்கொண்டே இருங்கள். நீங்களும் உங்கள் செயலும்தான் உங்களுக்கான மதிப்பீடு.மக்களின் பார்வையோ,அங்கிகாரமோ அல்ல.

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

உங்களிடம் இருப்பவற்றின் மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள்.(satisfy what you have)

உங்களிடம் இருப்பவற்றின் மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள்.(satisfy what you have)
உங்களிடம் இருப்பவற்றின் மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள்.(satisfy what you have)

உங்களிடம் இருப்பதை பொருந்திக்கொள்ளுங்கள் என்று குறிப்பிடுவதைவிட முதலில் உங்களிடம் இருப்பதின் மதிப்பை உணர்ந்துகொள்ளுங்கள் என்றே நான் குறிப்பிட விரும்புகின்றேன்.ஏனென்றால் இன்றைக்கு நம்மில் பலரும் தன் மதிப்பையும் சரிவர புரிந்துகொள்ளவில்லை,தன்னிடம் இருப்பவற்றின் மதிப்பையும் சரிவர புரிந்துகொள்ளவில்லை என்பதே கசப்பான உண்மையாக இருக்கின்றது.பிறரிடம் இருக்கும் துரும்புகளும்கூட நம் கண்களுக்கு பெரிதாக தோன்றிவிடுகின்றது.ஆனால் நம்மிடமுள்ள பெரும் பெரும் அருட்களெல்லாம் நம் கண்களைவிட்டும் தூரமாக்கப்பட்டுவிடுவது என்பது நம் வாழ்வின் மிகப்பெரும் சாபம் என்பதாகவே நான் கருதுகின்றேன்.

சிறியதோ பெறியதோ நம்மிடமுள்ளவற்றின் மதிப்பை என்றுவரை நாம் உணர்ந்து கொள்ளமாட்டோமோ அன்று வரை நம் வாழ்வில் மன அமைதி என்பதற்கு இடமே இல்லை என்றே நான் கருதுகின்றேன்.இதற்கு உதாரணமாக ஒரு ஏழை வாளிபனின் நிகழ்வை இங்கு நான் சுட்டிக்காண்பிப்பதற்கு விரும்புகின்றேன்."அவ்வாளிபன் ஒரு விபத்தில் தாய் தந்தையரை இழந்து தன் குடிசை வீட்டில் இருளில் சிறிய வெளிச்சத்திற்கு முன்பாக அமர்ந்து சப்தமிட்டு அழுதுகொண்டிருந்தான்.அப்பக்கமாக கடந்து சென்றவர்களில் சிலரும் அவனுக்கு சில ஆறுதல்கள் சொல்லிவிட்டு கடந்து சென்று கொண்டுமிருந்தார்கள்.

இரவின் இருள் அதிகமாகத்தொடங்கவே,யாருமற்ற அவ்வாளிபனின் அழுகையும் அதிகமாக தொடங்கியது.அப்பொழுது அவ்வழியாக ஒரு துறவி கடந்து செல்லவே,இச்சப்தத்தை அவர் செவியுற்றார்.பிறகு அச்சப்தம் எங்கிருந்து வருகின்றது என்பதை நோக்கி நடக்கலானார்.அப்பொழுது இந்த சிறுவன் இருந்த வீட்டின் வாயிலையும் அவர் வந்தடைந்தார்.ஆனால் அச்சிறுவனோ இவரை கண்ட பிறகும் அழுதுகொண்டே இருந்தான்.உடனே அவன் அருகில் சென்ற துறவி அவனுடைய தலையை கோதிவிட்டு,ஓ வாளிபனே நீ ஏன் அழுகின்றாய் என்று கேட்டார்.

என் பெற்றோர்கள் எதிர்பாராத விபத்தில் இறந்துவிட்டார்கள் என்று நடந்ததை விவரித்தான்.மேலும் தனக்கென்று இன்று யாருமில்லை என்பதையும் முறையிட்டான்.அதனை கேட்ட துறவி கவலைப்படாதே நான் இருக்கின்றேன் என்றார்.உடனே அவ்வாளிபன் மிக்கநன்றி என்று கூறிவிட்டு மீண்டும் அழத்தொடங்கினான்.ஏன் நீ மீண்டும் அழுகின்றாய் என்று அத்துறவி  அவனிடம் கேட்கவே.நான் ஏதுமற்றவனாக இருக்கின்றேன்.எனவே என் வாழ்வே முடிந்துவிட்டது என்றே நான் கருதுகின்றேன் என்று அவ்வாளிபன் பதிலளித்தான்.

அவ்வாளிபனின் மனோநிலையை புரிந்துகொண்ட துறவி "அப்படியா உன்னிடம் ஏதுமில்லை என்றே நீ நம்புகின்றாயா என்று திருப்பிக் கேட்டார்.அவ்வாளிபனும் ஆம் என்னிடம் மதிக்கதக்க எதுவுமே இல்லை என்றே நான் நினைக்கின்றேன் என்றான்.அப்படியா...!அப்படியானால் இதோ இந்த சிமிலியின் குமிழியை எனக்கு தருவாயா என்று துறவி கேட்டார். அவ்வாளிபனும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றான்.

துறவியும் அதனை எடுத்துக் கொண்டு அவர் பாதையை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார்.ஆனால் சிறிது தூரம் கூட அவர் கடந்திருக்கமாட்டார் அவ்வாலிபனோ "ஐயா துறவியே" சற்று நில்லுங்கள் என்று கூக்குறலிட்டான். அத்துறவியும் நின்றார்."ஐயா நீங்கள் எடுத்துச்சென்ற சிமிலியின் குமிழி இல்லாததால் என் விளக்கு அனைந்து என் வீடே இருளாகிவிட்டது.எனவே தயவு செய்து இந்த குமிழியை என்னிடமே திருப்பி தந்துவிடுங்கள் என்றான். அப்பொழுது அத்துறவியும் புன்முறுவல் பூத்துக் கொண்டே "ஓஹ் இது உனக்கு அவ்வளவு அவசியமான பொருளா"என்று கூறிக் கொண்டே அவ்வாளிபனின் கையில் ஒப்படைத்தார்.

பிறகு கூறினார். "ஓ வாலிபனே இந்த உலகில் நீ எது வைத்திருந்தாலும் அதனுடைய மதிப்பு என்ன என்பதை முதலில் உணர்ந்து கொள்.உன்னிடமுள்ள எப்பொருளையும் தாழ்வாக கருதாதே...!இவ்வாறு நீ செய்தால் நிச்சயமாக உன் வாழ்வில் நீ மிகச்சிறந்த மனிதனாக வருவாய் என்று உபதேசித்துவிட்டு கடந்து சென்றுவிட்டார்.அப்பொழுதுதான் அச்சிறுவன் இவ்வுலகில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்கின்றது என்பதை உளமாற உணரத்தொடங்கினான்.பிறகு அக்கிராமத்திலேயே தலை சிறந்த படைவீரனாகவும் திகழ்ந்தான் என்றும் வரலாறு நீளுகின்றது.

நீதி:

இவ்வாளிபனின் மனோ நிலையே இன்றைக்கு பெரும்பாலான மக்களிடம் குடிகொண்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.பல ஆயிரம் பொருட்களை குவித்துவைத்திருந்தாலும் உங்கள் மனமோ இல்லாத ஒன்றை மட்டுமே காண்பித்து உன்னிடம் ஒன்றுமே இல்லை ஆகவே நீ ஒன்றுமில்லாதவனே என்று நிறூபிக்கத்துடித்தால் தயவுசெய்து அந்த எண்ணத்தை தூக்கி எறிய தயாராகிக்கொள்ளுங்கள்.மேலும் அவற்றிற்கு உங்களிடமுள்ள பொருட்களின் மீது உள்ள மதிப்பை உணர்ந்து கொள்வதற்கான பயிற்சியை வழங்குங்கள்.இல்லையெனில் உங்கள் வாழ்வு முழுவதும் இருண்ட இருளாகவே அமைந்துவிடும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

வாசிப்பை வழக்கமாக்குங்கள் வழமாக வாழுங்கள்.(Book reading)

வாசிப்பை வழக்கமாக்குங்கள் வழமாக வாழுங்கள்.(Book reading)
வாசிப்பை வழக்கமாக்குங்கள் வழமாக வாழுங்கள்.(Book reading)

 

வாசிப்பு ஒருவன் தன்னை செம்மைபடுத்திக் கொள்வதற்கான சிறந்த வழியாகும்.யார் வாசிப்பை தொடர்ந்து கடைபிடித்து வருவாரோ அவரை வெள்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல என்றே நான் கருதுகின்றேன்.வெளிப்படையாக கூற வேண்டுமானால் இன்றைய தலைவர்கள் அனைவரும் நேற்றைய வாசிப்பாளர்களே.ஆம்..!புத்தகங்களை வாசிப்பதின் மூலம் மட்டுமே சமூகத்தில் ஒரு சிறந்த மனிதன் உறுவெடுக்க முடியும் என்பது எனது ஆழமான நம்பிக்கையாக இருக்கின்றது.ஏனென்றால் புத்தகங்கள்தான் முந்தைய வரலாறுகளையும் அனுபவங்களையும் சுமந்து வந்து  பிந்தைய சமூகத்திற்கு அழகுற படிப்பினையை போதிக்கும் அற்புத கருவியாக இருக்கின்றது.

யார் அவற்றின் மூலம் படிப்பினை பெற்றுக்கொள்ள விரும்புகின்றார்களோ அவர்களே தன் சமூகத்திற்கான சிறந்த தலைவர்களாக தங்களை உறுவாக்கி கொள்ளவும் செய்கின்றனர்.யார் அவற்றை உதாசினப்படுத்துகின்றார்களோ அவர்கள் சமூகத்தில் மூடர்களாகவே வலம்வர விரும்புகின்றனர்.புத்தக வாசிப்பு என்பது உண்மையிலேயே ஒரு தனி உலகமாகும்.அது அறிவும், சிந்தனையும்,அனுபவங்களும் மட்டுமே பூத்துக்குழுங்கும் ஒரு அற்புத சோழையாகும்.அதற்குள் நுழைந்துவிட்டால் வண்ண வண்ண பூக்களும், அருசுவை மிகுந்த கனிகளும் நம்மை திக்குமுக்காட செய்துவிடும்.

இதனால் அதற்குள் நுழைந்துவிட்டவர்களால் மிக எளிதில் அதனைவிட்டும் வெளியேறிவிட முடியாது என்பதே நான் அறிந்த உண்மை.ஏனெனில் அறிவு தாகம் என்பது அணைபோட முடியாத பேரழையாக இருக்கின்றதல்லவா. லட்சோப லட்ச புத்தக வடிவங்களில் வைரமும்,வைடூரியங்களும் நம் கண்களுக்கு முன்பே கொட்டிக்கிடக்கின்றது.ஆனால் நம்மில் பலரும் வீண் வேடிக்கையெனும் கூலாங்கற்களையே நமக்காக தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பது வேதணையான விஷயமாகும்.

எனக்கு தெரிந்து மிக அற்புதமான (டைம் பாஸ்) நேர கழிப்பு என்பது புத்தக வாசித்தலாகவே இருக்கின்றது என்றே நான் கூறுவேன்.ஏனெனில் நம் நேரமும் பயனுள்ள முறையில் கழிந்துவிடுகின்றது.மேலும் நம் ஆன்மாவிற்கு அறிவூட்டிய கடமையும் நமக்கு நீங்கிவிடுகின்றது.அண்பர்களே சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள்.!வாசிப்பு என்பது நம் வாழ்வில் எத்தனையோ மாற்றங்களை தரக்கூடியதுதான் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

வாசிப்பின் பலன்கள். 

1.சிறந்த வழித்துணையாக இருக்கும்.

2.சிந்தைனையை சுறுசுறுப்பாக்கி வைக்கும்.

3.மனதை உத்வேகப்படுத்தும்.

4.கற்பனைத்திறனை அதிகரிக்கச் செய்யும்.

5.மொழி புலமையை அதிகரிக்கச் செய்யும்.

6.நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

7.மன அமைதியை தரும்.

8.கவனச் சிதறல்களைவிட்டும் பாதுகாக்கும்.

9.மிகச் சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்.

10.அன்றாட நிகழ்வுகளை அறியச் செய்யும்.

மேற்கூறிய இந்த பத்து காரணங்களில் எக்காரணத்திற்காக வேண்டுமானாலும் நீங்கள் புத்தகங்களை வாசியுங்கள்.ஏனெனில் அனைத்தும் நம் வாழ்கைக்கு அவசியமானதே என்றே நான் நம்புகின்றேன். இறுதியாக ஒன்றை நான் கூறிக்கொள்கின்றேன்.இயந்திரத்தனமான உங்கள் உடலுக்கான வாழ்வை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு உங்கள் ஆன்மாவிற்கும் வாசிப்பு என்னும் வரப்பிரசாதத்தை சற்று விருந்தளியுங்கள்.!

இக்கட்டுரையின் விரிவு கருதி இத்தோடு இக்கட்டுரையை முடித்துக் கொண்டு பின்வரும் கட்டுரையில் புத்தகங்களை எவ்வாறு வாசிப்பது என்பது குறித்தும் அதனால் நம்மிடம் ஏற்படும் பலன்கள் குறித்தும் விவரிக்கின்றேன்.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

கல்வி அறிவும் மனித வாழ்வும் (Education and Human's life)

கல்வி அறிவும் மனித வாழ்வும்
கல்வி அறிவும் மனித வாழ்வும்

கல்வியின் முக்கியத்துவம்.

கல்வி அறிவே இந்த உலகின் பல்லாயிரம் உயிரனங்களுக்கு மத்தியில் மனிதனை வேறுபடுத்திக்காட்டும் அற்புத சக்தியாக இருக்கின்றது.மேலும் இதுவே ஒரு மனிதனை தனித்துவப்படுத்தி அடையாளம் காட்டும் மகத்தான அடையாளச் சின்னமாகவும் இருக்கின்றது.ஒரு மனிதனிடம் காணப்படும் கல்வி என்பது ஒரு காலியான பாத்திரத்தில் நிறம்பி இருக்கும் அருசுவை பானத்தைப் போன்றதாகும்.அல்லது வரட்சியான ஒரு தரிசு நிலத்தில் பூத்துக் குழுங்கும் மலர்ச் சோழையைப் போன்றதாகும்.

அவற்றால் அம்மனிதர் பலனடைவதோடு அவரை சுற்றியுள்ளோரையும் அவரால் பலனடையச் செய்துவிட முடியும்.இன்னும் இத்தகைய மனிதரால் இந்த உலகை பூஞ்சோழையாக மாற்றியமைக்கவும் முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.இதற்கு அற்புதமான முன் உதாரணம் நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே.அவர் தன்வாழ்வில் கல்வியின் கேந்திரமாக திகழ்ந்தார்.எனவே சான்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்னும்  அடைமொழியிற்கும் சொந்தக்காரரானார்.

மேலும் இந்த உலகில் அற்புதமான சக்திகளை உறுவாக்கும் திறன் கல்வியாளர்களுக்கு மட்டுமே உள்ளது என்பதை மிக ஆனித்தரமாக வலியுறுத்தியும் சென்றார்.அவ்வாறே கல்வியின் சிறப்பு குறித்து பேசியபோது "நீங்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்று விரும்பினால் உங்கள் சந்ததியினருக்கு கல்வியை போதியுங்கள்"என்று மஹாத்மா காந்தி அவர்களும் போதித்திருப்பதை நம்மால் காண முடிகின்றது.

அவற்றைப் போன்றே இந்த உலகை மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்த ஆயுதம் அது கல்வி மட்டுமே என்று நெல்சன் மன்டேலா அவர்கள் கல்வியின் அவசியத்தை விவரித்திருப்பதையும் இங்கு நான் உங்களுக்கு நினைவூட்டிக் கொள்கின்றேன்.ஆக அன்பர்களே!கல்வியால் மட்டுமே உங்களை நீங்கள் ஒரு அற்புத மனிதராக கட்டியமைத்துக் கொள்ள முடியும் என்பதையும்,இந்த கல்வியால் மட்டுமே ஒரு அற்புதமான சுற்றுச்சூழலையும் உங்களால் கட்டியமைத்துக்கொள்ள முடியும் என்பதையும் ஆழமாக உணர்ந்துகொள்ளுங்கள்.

உங்கள் உடலை கட்டுடலாக அமைத்துக்கொள்ள எப்படி பல்வேறு கடினங்களை ஏற்க தயாராகின்றீர்களோ அதனைப் போன்றே உங்கள் அறிவாற்றலையும் வளர்த்துக்கொள்ள நீங்கள் தயாராகிக்கொள்ளுங்கள். உங்களுடைய கல்வி அறிவையே தனித்துவமிக்க உங்கள் அடையாளமாக இவ்வுலகிற்கு நீங்கள் விட்டுச்செல்லவேண்டும் என்ற வேட்கையோடு வாழ்வை நகர்த்துவதற்கு முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்.நம்மில் சிறியவர் பெரியவர் என்ற எவ்வித வேறுபாடுமின்றி பெரும்பாலானோர் அடிப்படை கல்வியையும் கூட கற்றுக்கொள்ள விரும்பாமல் இருப்பது மிகப் பெரும் கைசேதமாகவே நான் காண்கின்றேன்.

வீண் கேளிக்கைகளிலும்,வேடிக்கைகளிலும் அதிகமான நேரத்தை கழிக்கும் நாம் நம்முடைய அறிவை வளர்த்துக்கொள்வதற்கான வழிகளை அமைத்துக் கொள்வதற்கான திட்டங்களை யோசித்துப்பார்ப்பதே இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருக்கின்றது.நல்ல புத்தகங்களை வாசிப்பதற்கோ,நற்சிந்தனையை தூண்டுவதற்கோ,நல்ல உரையாடல்களை கேட்பதற்கோ,கல்வியாளர்களை சந்திப்பதற்கோ நேரமில்லை என்று கூறும் நாம்தான் பலமணி நேரங்கள் எவ்வித நோக்கமுமின்றி தொலைக்காட்சியின் முன்பும்,தொலைபேசியின் முன்பும் அமர்ந்து நேரத்தை வீணடிக்கின்றோம் என்பதை மனசாட்சியோடு சற்று யோசித்துப்பார்க்க கடமை பட்டிருக்கின்றோம்.

அண்பர்களே இறுதியாக ஒன்றை கூறிக்கொள்கின்றேன்."உங்கள் கல்வியின் தரமே உங்களின் தரம்" என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்,"தயவு கூர்ந்து இன்றிலிருந்து கற்பதை தொடருங்கள்!உங்கள் வாழ்வை மெறுகூட்டிக் கொண்டே செல்லுங்கள்.!அடுத்தபடியாக நாம் அரசால் எப்படி கல்வியூட்டப்படுகின்றோம் என்பதை குறித்து ஒரு சில விஷயங்களை பார்ப்போம்.

அடிப்படை கல்வியும் அரசும்.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆரம்பத்தில் இன்னபொருள் இது வென்றுகூட அறியமுடியாதவனாகவே பிறக்கின்றான்.பிறகு வாழ்வின் நேரடி அனுபவங்களால் நெருப்பு என்பது சுடும் என்றும்,பனி என்பது குளிரும் என்றும் கற்கத்தொடங்கினான்.இப்படித்தான் ஒவ்வொரு மனிதனின் கல்வியறிவும் அவனுக்குள் தொடக்கமாகியது என்பதை நாமெல்லாம் நன்றாக அறிந்திருப்போம்.இந்த கல்வி அறிவு என்பது ஒவ்வொரு மனிதனின் அனுபவம், மற்றும் சுற்றுச்சூழைலை பொறுத்து மாறுபட்டும் காணப்படுகின்றது.

ஆம் இந்த கல்வி அறிவு என்பது எல்லோருக்கும் ஒரே அளவுகோளில் இருப்பது கிடையாது.ஒவ்வொரு மனிதனின் அணுகுமுறைக்கும்,அவனுடைய செயல்பாட்டிற்கும் தகுந்தவாறு அது மாறுபட்டுக்கொண்டே செல்கின்றது.ஆக மனித கல்வி அறிவு என்பது எல்லோராலும் அடைந்து கொள்ள முடிந்த பலதரப்பட்ட அனுபச்சிதறல்கள் என்றே நான் குறிப்பிட விரும்புகின்றேன். ஏனெனில் இந்த உலகில் எத்துனை வகையான பொருட்கள் உள்ளதோ அத்துனை வகையான அனுபவங்களையும் கல்வியையும் நம்மால் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்.

இதன் அடிப்படையில்தான் இன்றைய அரசும் மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய மிக அவசியமான படிநிலைகளை மட்டும் பாடதிட்டமாக வகுத்து கொடுத்துக்கொண்டிருக்கின்றது.மேலும் அவற்றில் மொழி சார்ந்த இலக்கண இலக்கிய பாடங்களையும்,கணிதம் சார்ந்த எண்ணிக்கை பாடங்களையும், அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி பாடங்களையும்,வரலாறு சார்ந்த மனித வாழ்வியல் பாடங்களையும் மொத்த தொகுப்பாக தொகுத்து பாட புத்தகங்களாக அச்சடித்து கற்பித்துக்கொண்டிருக்கின்றது.

இவற்றையெல்லாம் ஒரு மனிதன் கற்பதின் மூலம் தன் வாழ்வின் பெரும்பங்கை தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களால் அல்லாமல் முந்தய அனுபவங்களின் புத்தக தொகுப்புகளாலேயே மிக இலகுவாக அறிந்துகொள்ள முடியும் என்ற நோக்கத்தில் அரசு இவ்வாறு செய்து வருகின்றது.என்னைப் பொருத்தமட்டில் இத்தைகைய கல்விமுறை என்பது மிக அவசியமான எல்லோருக்குமான அடிப்படை கல்வி முறை என்றே பார்க்கின்றேன். இத்தைகைய கல்வியை அரசு ஒவ்வொரு மாணவர்களுக்கும் கட்டாயக் கல்வியாக கொடுப்பது மிகப்பெரும் வரப்பிரசாதமேயாகும்.

மேலும் இத்தகைய கல்வியை அனைத்து மாணவர்களும் கட்டாயம் பெற வேண்டும் என்பதற்காகவே அரசு பல்வேறு சலுகைகளையும் மாணவர்களுக்கு வழங்குவது என்பது மகத்தான செயலாகவே நான் கருதுகின்றேன்.ஆகவே கல்வியை கொடுப்பதில் அரசு நல்ல பல திட்டங்களையே நடைமுறை படுத்துகின்றது என்பது எனது கண்ணோட்டமாகும்.இது விஷயத்தில் அரசை குற்றம் சாட்டுவதற்கு எந்த முகாந்திரங்களும் கிடையாது என்பதே எனது வாதமுமாகும்.

ஆனால் கல்வியின் முக்கியத்துவத்தை அறியாத மக்களே நம்மில் அதிகம் காணப்படுகின்றனர் என்பதை நம் யாராலும் மறுக்க முடியாது என்பதையும் இங்கு நான் சுட்டிக்காண்பித்துக் கொள்கின்றேன்.இன்றைய தலைமுறையே இதற்கு மிகப்பெரும் எடுத்துக் காட்டாக இருக்கின்றது என்பதாகவும் நான் கருதுகின்றேன்.கட்டுரையின் விரிவு கருதி இக்கட்டுரையை இத்தோடு முடித்துக் கொள்கின்றேன்.பின்வரும் கட்டுரையில் இன்றைய மாணவர்கள் கல்வியை கற்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும், இன்றைய மாணவர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பது குறித்தும் விவரிக்கின்றேன்.

வெள்ளி, 30 ஜூலை, 2021

நற்குணமே ஒரு மனிதனை முழுமைபடுத்துகின்றது. (Good Characters)

நற்குணமே ஒரு மனிதனை முழுமைபடுத்துகின்றது. (Good Characters)
நற்குணமே ஒரு மனிதனை முழுமைபடுத்துகின்றது. (Good Characters)

ஒரு மனிதன் தன் செல்வத்தை இழந்துவிட்டால் உண்மையில் அது இழப்பே அல்ல என்றே நான் கூறுவேன்.ஒருவேலை ஒருவன் தன் ஆரோக்கியத்தை இழந்துவிட்டால் அவன் வாழ்வில் ஏதோ ஒரு முக்கிய பகுதியை இழந்துவிட்டான் என்பதாக நான் எடுத்துக்கொள்வேன்.ஆனால் ஒருவன் தன் குணத்தை இழந்துவிடுவானேயானால் அவன் உண்மையில் தன் வாழ்வில் பெரும்பகுதியை இழந்துவிட்டான் என்பதே எனது ஆழாமான நம்பிக்கையாகும்.ஆம் அன்பர்களே..!அறிவும் செல்வமும் நமக்கு அதிகாரத்தை இழுத்துவந்து கொடுத்துவிடலாம்.ஆனால் நற்குணம் மட்டுமே நமக்கான மதிப்பை இழுத்து வரக்கூடியதாக இருக்கின்றது.அவ்வாறே அழகும்,திறமையும் நம்மை உயர்ந்த இடத்தில் கொண்டுசென்று அமர்த்திவிடலாம்.ஆனால் நற்குணம் மட்டுமே அவற்றிலேயே நிலைத்திருக்கச்செய்யும் ஆற்றலுடையதாக இருக்கின்றது.

மக்களெல்லாம் அறிவையும் ஆற்றலையும் போற்றிப்புகழலாம்,ஆனால் இறைவனோ நற்குணத்தை மட்டுமே போற்றிப் புகழ்கின்றான் என்று வேதங்கள் கூறுகின்றது.பல சமயங்களில் ஒரு மனிதனின் முழு வாழ்வையும் அவனுடைய குணமே முடிவு செய்கின்றது என்பதே யாராலும் மறுக்க முடியாத நிதர்சனமாகும்.பெரும்பான்மையான வெற்றியாளர்களின் வெற்றிக்கு காரணமாக இருந்ததே இந்த நற்குணம்தான் என்று நான் குறிப்பிட்டாலும் அது மிகையாகாது என்றே கருதுகின்றேன்.ஏனெனில் நற்குணம் என்பது பலசமயங்களில் எல்லா திறமைகளையும் மிகைத்துவிடக்கூடிய ஆற்றல் வாய்ந்ததாக அமைந்துவிடுகின்றது.

இவை மட்டுமின்றி இந்த உலகம் ஒரு நற்குணம் கொண்டவனையே தன் தலைவனாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றது.ஏனெனில் ஒரு நல்ல மனிதனால் மட்டுமே இந்த உலகில் நல்ல பல முன்னேற்றங்களை கொண்டு வரமுடியும் என்பதாக இந்த உலகம் நம்புகின்றது.ஆகவே அன்பர்களே..!நீங்கள் ஒரு முழுமைபெற்ற மனிதராக ஆகவேண்டுமானல் உங்களுடைய நற்குணத்தை வளர்த்துக்கொள்வதில் அதிகம் கவனம் செழுத்துவதற்கு தயாராகிக்கொள்ளுங்கள்.அல்லது இந்த வாழ்வில் ஒரு முழுமை பெற்ற மனிதனாக ஆகும் கனவை தூரமாக வைத்துவிட்டு யாருக்கும் பாரமின்றி உங்கள் வாழ்வை அதன் போக்கில் தொடருவிடுங்கள்.அடுத்தபடியாக நற்குணம் என்றால் என்ன என்பதை நாம் சற்று அறிந்து கொள்வோம்.

நற்குணம் என்றால் என்ன..?

யாருக்கும் அநீதி இழைக்காமல் நலவை மட்டுமே நாடுவதற்கு மனோ தத்துவ நிபுணர்கள் நற்குணம் என்று குறிப்பிடுகின்றார்கள்.இந்த குணங்களை அவர்கள் இரண்டு வகைகளாகவும் பிறித்திருக்கின்றார்கள்.

அவைகளைப்பற்றி பார்ப்போம்.

1. நம்மிடம் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணங்கள்.

2. நம்மிடம் தவிர்த்துக் கொள்ள வேண்டிய குணங்கள்.

நாம் நம்மிடம் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எவை..?

1.நேர்மையை கடைபிடித்தல்

2.இரக்கம் காட்டுதல்

3.அக்கரை எடுத்துக்கொள்தல்.

4.பணிவை கடைபிடித்தல்.

5.மன்னித்தல்.

6.சகிப்புத்தன்மையை கடைபிடித்தல்.

7.தவறிற்காக மன்னிப்பு வேண்டுதல்.

8.உபகாரத்திற்கு நன்றி கூறுதல்.

9.எளிமையை கடைபித்தல்.

10.தனித்துவமாக இருத்தல்.

11.சுய மரியாதை பேணுதல்.

மேற்கூறிய அனைத்து குணங்களும் ஒவ்வொரு மனிதனிடமும் பெறப்பட வேண்டிய முக்கிய நற்குணங்களாகும்.இவற்றை வளர்த்துக்கொள்வதற்காக ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது தாழ்வான வேண்டுகோளாகும்.அடுத்தபடியாக இவை ஒவ்வொன்றும் நம் வாழ்விற்கு எவ்வளவு அவசியமாக இருக்கின்றது என்பதையும் இவற்றை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பதையும் பற்றி சற்று சுருக்கமாக நான் விளக்க முயலுகின்றேன்.

1.நேர்மையை கடைபிடித்தல்..!

இந்த உலகில் ஒரு மனிதன் தன்னை சீராக்கிக் கொள்வதற்கு நேர்மை என்னும் ஒறே ஒரு ஆயுதம் போதும் என்பதாகவே நான் நம்புகின்றேன்.அவனுக்கு எந்த சட்டதிட்டங்களும் தேவையே இல்லை என்றும் கூட குறிப்பிடலாம் மேலும் நேர்மையான ஒரு மனிதர் இறைவனால் தனித்துவமாக படைக்கப்பட்ட ஒரு அதிஷயம் என்பதாகவே நான் பார்க்கின்றேன்.ஆம் அன்பர்களே.உண்மையில் நேர்மையைவிட வேறு எதுவும் உங்களுக்கு நன் மதிப்பை பெற்றுத்தந்துவிடாது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.!

நேர்மைக்கென்று ஒரு பலம் இருக்கின்றது.அதனை உலகில் யாராலும் அசைத்து பார்த்துவிட முடியாது என்பதே நிதர்சனம்.ஆனால் அதனை பெரும்பாலான மக்கள் உணர்ந்து கொள்ளவே இல்லை என்பதுவே வேதணையான விஷயம்.உண்மையில் இந்த உலகில் அதிகம் சந்தோஷமாக இருப்பவர்கள் நேர்மையான மனிதர்களே என்று ஒரு ஆய்வு குறிப்பிட்டுக் காட்டுவதையும் உங்களுக்கு நான் நினைவூட்டிக் கொள்கின்றேன்.

அவ்வாறெ நேர்மை என்பது பல சமயங்களில் உங்களுக்கு அதிக நண்பர்களை தராமல் போய்விடலாம்.ஆனால் இந்த நேர்மைதான் உங்களுக்கு தகுதியான நபர்களை கொண்டு வந்து சேர்ப்பதற்கும் காரணமாக இருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள்.எனவே நீங்கள் நம்பப்பட வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் நம்பிக்கைக்குறியவர்களாக இருப்பதற்கு தயாராகிக்கொள்ளுங்கள். குறிப்பாக உங்களை நேசிப்பவர்களுக்கு நீங்கள் உங்கள் நேர்மையை பரிசளியுங்கள்.

ஏனென்றால் நேர்மை என்பது உறவுகளுக்கு மத்தியில் தண்ணிரைப் போன்று இருக்கின்றது.அதற்கு எந்த நிறமுமில்லை எந்த வடிவமுமில்லை எந்த சுவையுமில்லை என்றாலும் அதுவே வாழ்க்கையின் அடிப்படை தேவையாக அமைந்திருக்கின்றது.ஆகவே அதனை ஒரு காலமும் இழந்துவிடாதீர்கள். அவ்வாறே அதிகம் மிகச்சரியாக இருப்பதுதான் நேர்மை என்றும் நீங்கள் எண்ணிவிடாதீர்கள்.அது யாராலும் முடியாத காரியமாகும்.அவ்வாறின்றி உங்களுக்கும் உங்களை நம்புபவர்களுக்கும் நீங்கள் உண்மையாக இருப்பதே நேர்மை என்பதை புறிந்து கொள்ளுங்கள்.

மேலும் நீங்கள் நேர்மையாக நடந்து கொண்டதற்காக யாரிடமும் மன்னிப்பு வேண்டாதீர்கள்.ஏனென்றால் நேர்மை என்பது எந்த நலவையும் துண்புறுத்துவது அல்ல.அது பொய்களுக்கே கஷ்டத்தை கொடுக்கின்றது. அதனைப் பொன்றே நேர்மையாக இருப்பது மட்டுமே உங்கள் கடமை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.உங்கள் நேர்மையை பிறருக்கு நிறூபிக்க நினைப்பது என்பது உங்களை நீங்களே குறைத்துக்கொள்ளும் செயலில் உங்களை நீங்களே போட்டுக்கொள்வது என்பதையும் சுட்டிக்காண்பித்துக் கொள்கின்றேன்.

2.இரக்கம் காட்டுதல்.

பிறரின் மீது இரக்கம் காட்டுவது என்பது மிக கடினமான ஒன்று என்று நம்மில் பலரும் எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் அதனை விட மிக விலையுயர்ந்த ஒன்றை மிக இலகுவாக யாருக்கும் கொடுத்துவிட முடியாது என்பதே நான் அறிந்த உண்மை.சிறியதோ பெறியதோ நாம் காட்டும் இரக்கமே இவ்வுளகில் பேரழகு என்பதாகவே நான் எண்ணுகின்றேன்.ஆம் அன்பர்களே.உங்களுடைய வாழ்வில் உங்களுக்கு அர்த்தம் தரும் ஒரு தருனம் என்பது நீங்கள் பிறர் மீது இரக்கம் காட்டும் தருனம் மட்டுமே..!ஏனென்றால் அங்குதான் உங்களை நீங்கள் உண்மையான மனிதராக நிறூபிக்கின்றீர்கள்.

நம்மில் பலரும் பிறரை உயர்த்துவதால் நாமும் உயர்கின்றோம் என்பதையே மறந்தே போய்விடுகின்றனர் என்பது துரதிஷ்டவசம் என்பதாகவே நான் நினைக்கின்றேன்.உண்மையில் இந்த உலகில் மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்பதற்கு அடையாளமே இரக்க குணமுடையவர்கள்தான் என்று குறிப்பிட்டாலும் அது மிகையாகாது.ஆகவே அன்பர்களே  சிறியதோ, பெரியதோ,இரக்கமான வார்த்தைகளையே எங்கு சென்றாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.அது யாறேனும் ஒருவரின் வாழ்விற்கு ஒழியேற்றிவிடலாம். மேலும் ஒருவரின் இருள் சூழ்ந்த வாழ்வை வண்ணமயமாக்க அதுவே காரணியாகவும் அமைந்துவிடலாம்.

இன்னும் சொல்லப்போனால் இரக்கமற்ற மனிதர்களிடமும் கூட நீங்கள் இரக்கம் காட்டுங்கள்.ஏனென்றால் அவர்கள்தான் அதனின் பக்கம் அதிகம் தேவையுடையவர்களாக இருக்கின்றார்கள்.பிறரைப்பற்றி யோசிப்பதற்கே நேரமில்லை என்றளவிற்கு உங்கள் நலனில் மட்டுமே மூழ்கிவிடாதீர்கள். ஏனெனில் அதனை விட துற்பாக்கியம் வேறொன்றுமில்லை.அவ்வாறே இரக்கம் காட்டுவது என்பது பலஹீனமான செயல் என்பதாக எண்ணிவிடாதீர்கள்.ஏனென்றால் இரக்கம் காட்டுவதற்குத்தான் அதிகம் தைரியம் தேவையிருக்கின்றது.அன்பர்களே நன்றாக நினைவில் கொள்ளுங்கள்..!

இந்த உலகை மாற்றியமைக்கும் சக்தி என்பது ஒன்றிற்கு இருந்தால் அது இரக்க குணத்திற்கு மட்டுமே இருக்கின்றது என்பதாகவே நான் நம்புகின்றேன். ஆகவே நீங்கள் இந்த உலகால் நேசிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் எங்கு சென்றாலும் உங்கள் இரக்க குணத்தை விதைத்துவிட்டு வாருங்கள்..!எங்கு சென்றாலும் நீங்கள் நிச்சயம் நேசிக்கப்படுவீர்கள்.

3.அக்கரை எடுத்துக்கொள்தல்.

இந்த பொய்யான உலகில் அன்பு இருப்பதாக சொல்லிக்கொள்பவர்களும் காட்டிக்கொள்பவர்களும் அதிகம் இருக்கின்ரனர்.ஆனால் அதனை உண்மையாக செயல்படுத்துபவர்கள் மிகக்குறைவே என்றே நான் பார்க்கின்றேன்.ஏனென்றால் அன்பின் அடையாளமே அக்கரைதான் என்பதாகவே நான் நம்புகின்றேன்.ஆம் அன்பர்களே..!இரு மனிதர்களுக்கு மத்தியில் உறவை உறுதிபடுத்துவதே இந்த அக்கரைதான்.மேலும் பலரின் உறவுகள் முறிந்து போவதற்கு காரணமும் அக்கரைப்பட வேண்டிய தருனத்தில் சுய நலமிகளாக நின்று வேடிக்கை பார்ப்பதுதான்.

எனக்கு தெரிந்து உறவில் ஒருவர் மற்றொருவர் மீது எடுத்துக் கொள்ளும் அக்கரையை விட மிக மகிழ்ச்சியான தருனம் வேறெதுவும் இல்லை என்பதே எனது நிலைப்பாடாகும்.உண்மையில் அக்கரை என்பதற்கு உலகில் ஒரு வடிவம் கொடுக்க நான் நினைத்த பொழுது தாய் மட்டுமே அதற்கு தகுதியானவர் என்பதாக நான் நம்புகின்றேன்.ஏனென்றால் அம்மாவிடம் மட்டுமே கலப்பற்ற அன்பு நிறம்பி நிற்கின்றது.அதனை அவர்கள் கொடுக்க நினைப்பதில் கொஞ்சமும் குறைவைப்பதில்லை.இன்னும் சொல்லப்போனால் கோபத்திலும் கூட அக்கரை காட்டும் அதிசய பொக்கிஷம் அவள்.ஆகவே அன்பர்களே..!

உங்களை சுற்றியிருப்பவர்கள் மீது உங்களால் முடிந்தளவு அக்கரை காட்டுங்கள்.அவ்வாறே உங்கள் மீது அக்கரை காட்டுபவர்களையும் ஒருபோதும் இழந்துவிடாதீர்கள்.மேற்கூறிய குனங்கள் தவிர்த்து இன்னும் பல குணநலன்கள் சம்மந்தமாக எனது "முழுமை பெற்ற மனிதனாக இரு"என்ற புத்தகத்தில் விவரித்திருக்கின்றேன்.உங்களை ஒரு அற்புத மனிதனாக செதுக்கிக்கொள்ள எனது அந்த புத்தகத்தை வாசியுங்கள்.அவற்றில் கீழ் வரும் தலைப்புகளின் விளக்கங்களை எல்லாம் உங்களால் பெற்றுக் கொள்ள முடியும். 

4.பணிவை கடைபிடியுங்கள்..!

5.மன்னித்தல்

6.பொறுமை

7.மன்னிப்பு வேண்டுதல் .

8.நன்றி கூறுங்கள் .

9.எளிமையை கடைபிடியுங்கள்.

10.தனித்துவத்துடன் இருங்கள் . 

11.சுயமரியாதை பேணுங்கள் . 

2.கெட்ட குணங்கள் .

1.இழிவான எண்ணம்

2.ஆணவம்.

3.பொறாமை

4.பேராசை 

5.கோபம் .