வெள்ளி, 24 செப்டம்பர், 2021

சாதனைகளெனும் ஏமாற்று வித்தை

முன்னுரை:

இன்றைக்கு குழந்தைகளுக்கும் சரி வாலிபர்களுக்கும் சரி சாதனை என்பதாக பெரியவர்கள் சொல்லிக்கொடுப்பது மூன்றே மூன்று விஷயங்கள்தான் என்பதாகவே நான் காண்கின்றேன்.அவற்றைத்தவிர்த்து இந்த உலகில் மனிதன் பெரிதாக சாதிப்பதற்கு வேறொன்றுமில்லை என்பதைப்போன்ற கட்டமைப்பையே இந்த உலகம் உறுவாக்கி வைத்திருப்பதாக என்னால் காணமுடிகின்றது.அந்த மூன்றும் என்ன என்பதையும் அவற்றின் உண்மைத்தன்மை என்ன என்பதையும் விளக்குவதே எனது இந்த கட்டுரையின் நோக்கமாக கொண்டுள்ளேன்.வாருங்கள் அவற்றைப்பார்த்துவிடுவோம்.

அவைகள்:

முதலாவது : செல்வம் சேர்ப்பது.

இரண்டாவது:பிரபல்யமாவது:

மூன்றாவது:அதிகாரத்தில் அமர்வது:

1.செல்வம் சேர்ப்பது சாதனையா?

செல்வம் சேர்ப்பதை இன்றைய மனிதர்கள் மகத்தான சாதனை என்று எல்லா சமயயங்களிலும் வலியுறுத்துவதை பார்க்கமுடிகின்றது.எனவே செல்வம் உடையவர்களையே இந்த உலகிற்கு சிறந்த முன்னோடிகளாக வரும் கால சமூகத்திற்கு முன்வைக்கப்படுகின்றது.உண்மையில் என்னைப் பொறுத்த மட்டில் இது மிகப்பெரும் ஏமாற்று வித்தையாகவே கருதுகின்றேன்.

ஏனெனில் மனிதனின் தேவைகளில் ஒன்றான இந்த உலக செல்வம் என்பது மனிதனுக்கு அவசியம்தான் என்றாலும் அதனை காகித செல்வமாகவும் பொருள் செல்வமாகவும் மாற்றி அவைகள் அனைத்தையும் எவன் அடைந்துகொள்வானோ அவன்தான் மிகச்சிறந்தவன் என்று கூறி அவன் இந்த உலகில் ரசிக்க வேண்டிய அனைத்தையும் பிடிங்கிக்கொண்டு உலகம் தனக்குத்தேவையான அத்துனை காரியங்களையும் நிறைவேற்றிக்கொள்வதே இன்றைய பொருளாதார அமைப்பின் அடிப்படை நோக்கமாக நான் காண்கின்றேன்.

இங்கு நான் ஏதோ தமிப்பட்ட ஆன்மிகத்தையோ அல்லது துறவறத்தையோ வலியுறுத்த விரும்புவதாக தயவுகூர்ந்து எண்ணிவிடாதீர்கள்.ஏனெனில் அதுவும் இதுபோன்றே வேறுவிதமான மனித சுரண்டலுக்கு ஆளாக்கும் முக்கியமான ஒன்றுதான் எனபதிலும் எனக்கு மாற்றுக்கருத்தில்லை என்றாலும் இங்கு நான் குறிப்பிட விரும்புவது இந்த உலகில் வியாபார நோக்கோடு உறுவாக்கப்பட்ட அத்துனை செல்வத்தையும் அடைவதுதான் ஒரு மனிதனின் மகத்தான நிலை என்றும் மெலும் அதுதான் அவன் வாழ்வின் மிகப்பெரும் சாதனை என்றும் சித்தரிக்கத் துடிப்பது மிகப்பெரும் ஏமாற்று வித்தை என்பதை இங்கு புரிந்து கொள்ளும்படி சுட்டிக்காட்டவே விரும்புகின்றேன்.

எனவே இந்த உலகில் மனிதர்கள் வியாபார நோக்கோடு உறுவாக்கிய அல்லது சுய நலனிற்காக மட்டும் உறுவாக்கிய பொருட் செல்வங்களையோ அல்லது பணக்காகிதங்களையோ ஒருவன் அதிகம் அடைந்துவிட்டான் என்பதற்காக அவன் சாதனையாளனாக பார்க்கப்படுவது என்பது என்னைப் பொறுத்தமட்டில் மகத்தான ஏமாற்றாகும்.இன்னும் சொல்லப்போனால் அவன்தான் இந்த உலகின் மிகச்சிறந்த அடிமை என்பதையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

என்னுடைய இந்த கருத்தில் உங்களுக்கு நிச்சயம் உடன்பாடு இல்லாமல் போகலாம்.அல்லது பொருட்களும் பணக்காகிதமும் மட்டுமே உலகம் என்று உறுவாக்கப்பட்ட இன்றைய பொருளாதார அமைப்பின் ஆதிக்கம் உங்கள் கண்களை மறைக்கலாம்.ஆனால் மனிதனை இயந்திரத்தனமாகவும் அடிமையாகவும் மாற்றுவதற்கான கருவியே இந்த உலகமயமாக்கப்பட்ட பொருட் செல்வங்கள்தான் என்பதை பொருளாதாரத்தின் அடிப்படைவிதிகளே விளக்குவதை காணும்பொழுது இதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதைப்பற்றி நான் கவலைபடப்போவதில்லை.

இன்றைய பொருளாதர கோட்பாடே மனிதனை மனிதனாக வாழவிடாமல் அவனை பல்வேறு கட்டாயத்திற்குள் அடிமைப்படுத்தும் மிகப்பெரும் சதி என்பதே எனது தெளிவான கண்ணோட்டமாக நான் கருதுகின்றேன்.எனவே மிகப்பெரும் செல்வம சேர்ப்பது என்பது ஒருபோதும் பெரும் சாதனையாக பார்க்கப்பட முடியாது என்பதே எனது தீர்க்கமான முடிவாக இருக்கின்றது என்பதை வெளிப்படையாகவே இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

யாரெல்லாம் செல்வம் சேர்ப்பதை மட்டும் நோக்கமாக கொண்டு ஓடுகின்றார்களோ அவர்களுக்கு அது ஒரு வேளை சிற்றின்பம் அல்லது மனமகிழ்வை கொடுத்தாலும் உண்மையில் அது இந்த உலகில் அவர்கள் அடைந்துவிட்ட மகத்தான சாதனையாக பார்க்க எவ்வித தகுதியுமற்றதே என்பதை சுட்டிக்காண்பித்துக்கொண்டு அடுத்தபடியாக பிரபல்யமாவது இந்த உலகின் மகத்தான சாதனையா? என்பது சம்மந்தமாக பார்ப்போம் வாருங்கள்.!


2.பிரபல்யமாவது சாதனையா?

இன்றைக்கு எல்லோரும் தன்னை இந்த உலகமே நேசிக்க வேண்டும் என்றோ அல்லது இந்த உலகமே தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ அல்லது இந்த உலகமே தன்னை பாராட்ட வேண்டும் என்றோ ஆசிக்கும் நிலை பரவலாகிவிட்டது.பிற மனிதர்களின் அங்கிகாரத்தை பெற வேண்டும் என்பதற்காகவும் அல்லது அவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காகவுமே மட்டும் இங்கு பலரும் மஹா யுத்தமே புரிகின்றனர் என்றாலும் அது மிகையாகாது.

ஆம்...!

மக்களிடம் பிரபல்யம் ஆவது என்பது ஒரு பெரும் சாதனை என்பதாக தனக்குத்தானே எண்ணிக்கொண்டு இங்கு செயல்படும் மனிதர்களின் அட்டகாசம் சொல்லிலடங்காதது என்றே நான் கருதுகின்றேன்.தங்களையும் தங்களின் வாழ்வையும் மறந்துவிட்ட அம்மனிதர்கள் மக்கள் என்ன ஆடை அணிந்தாள் விரும்புவார்கள் என்றும் என்ன பேசினால் விரும்புவார்கள் என்றும் என்ன காட்டினால் விரும்புவார்கள் என்றும் அங்குளம் அங்குளமாக தரவுகள் தயாரித்து வைத்துக்கொண்டு அதற்கு தக்கவாறு தங்களையும் வெளிக்காட்டுவதின் மூலம் மக்களிற்கு மிக பிடித்தமானவர்களாக ஆவதற்கு போராடி வருகின்றனர்.

மேலும் சிலசமயங்களில் அவர்கள் தங்களின் குறூற கருத்தாக்கங்களான போதை பொருள் பாவித்தல் மற்றும் பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் மற்றும் கொலை கொள்ளையை ஊக்குவித்தல் மற்றும் சமூக வெறுப்பை தூண்டுதல் போன்ற மானக்கேடான செயல்களையும் பரப்புவதற்கு இந்த பிரபல்யத்தையே பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.

மேலும் இன்றைய பிரபல்யங்களில் பெரும்பாலானோர் மக்கள் தங்களின் காட்சியை பார்த்துவிட்டாலே போதுமானது அது தன் சாதனைக்கான அங்கிகாரம் என்பதாக தவறாகவும் எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் மக்கள் பிரபலங்களை பார்க்கின்றார்கள்,ரசிக்கின்றார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அவர்கள் வெறும் பிரபல்யத்தை மட்டும் ஒருவரின் உயர் சாதனையாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதே நிதர்சனமாகும்.

ஏனெனில் இந்த உலகில் யானைகள்,நாய்கள்,ஓநாய்களும் கூட காட்சிபடுத்தப்படுவதால் மிக பிரபல்யமாகிவிடுகின்றது என்பதை அவர்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றனர்.எனவே பிரபல்யம் என்பது ஒரு பெரும் சாதனை என்பது ஒரு போலியான ஏமாற்று வித்தை என்பதாகவே நான் கூற விரும்புகின்றேன்.இத்தகைய வித்தையை வியாபார நோக்கோடு சில தொலைக்காட்சி நிறுவனங்கள் ஊக்குவிக்குகின்றதே தவிர மற்றபடி மக்கள் பிரபல்யங்களை கொண்டாடுகிறார்கள் என்பது பொய்யான பிம்பமேயாகும்.

இங்கு ஒரு முக்கியமான அடிப்படையையும் விளக்கிவிட விரும்புகின்றேன். அதாவது மக்களுக்கு பெரிதும் உபயோகப்படும் காரியங்களை மக்களிடம் ஊக்குவிப்பதற்காக பிரபல்யப்படுத்தவேண்டியது கட்டாயம்தான் என்றாலும் இன்று தங்களை பிரபல்யப்படுத்திக்கொள்வதற்கே சில நற்காரியங்களை செய்து மக்களிடம் அங்கிகாரமும் பாராட்டும் தேடும் நிலை முன்பில்லாததை விட இப்பொழுது மிகவும் அதிகரித்துவிட்டது என்பதாகவே நான் கருதுகின்றேன்.

இதற்கு மிகப்பெரும் சான்றாக இன்றைக்கு வியாபார நோக்கம்கொண்ட சில சுய விளம்பர விரும்பிகள் தங்களின் சுயநலனுக்காக இத்தகைய செயலில் ஈடுபட்டு வருவதையும்,மேலும் அவர்கள் தங்களை இந்த உலகிற்கு பெரும் சாதனையாளர்களாக காட்டிக்கொள்வதையும் கண் ஊடாக காணமுடிகின்றது.ஆகவே அண்பர்களே நீங்கள் உங்களையோ அல்லது உங்களுடைய செயலையோ வெறும் மக்களின் அங்கிகாரத்திற்காவோ அல்லது பாராட்டிற்காகவோ மட்டும் விரும்பி பிரபல்யப்படுத்த விரும்பினால் அதைவிட மிக அறிவீனம் வேறொன்றுமில்லை என்பதை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்.ஏனெனில் அது ஒரு ஏமாற்று வித்தைதானே தவிர வேறொன்றுமில்லை.மேலும் அது உங்கள் வாழ்வில் பிரயோஜனங்களை இழுத்து வருவதைவிட நிறைய பிரச்சனைகளையே கொண்டு வரும் என்பதையும் ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.எனவே என்னைப் பொறுத்தமட்டில் பிரபல்யம் என்பது சாதனை என்பதை தாண்டி அது ஒரு பெரும் சோதனை என்பதாகவே கருதுகின்றேன். 


3.அதிகாரத்தில் அமர்வது சாதனையா?

உலகில் ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மீது அதிகாரம் செலுத்துவதற்கு பாடுபட்டதைபோல் அவனுடைய முன்னேற்றத்திற்காக பாடுபட்டிருந்தால் இந்த மனிதசமூகம் இரண்டாயிரம் ஆண்டிற்கான முன்னேற்றத்தை இன்றே பெற்று இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.அந்தளவிற்கு இந்த மனித சமூகத்தின் வாழ்வு அடக்குமுறைகளாளும் அதிகார வெறியாலும் கபலிகரம் செய்யப்பட்டு இருக்கின்றது என்பதையே வரலாற்றில் நம்மால் காணமுடிகின்றது.

ஆம்....!

குடும்பத்தில் யார் தலைவராக இருந்து முடிவெடுப்பது என்பதில் தொடங்கி பணி செய்யும் வேலை இடங்களை கடந்து அரசு ஆட்சி வரை அத்தனையிலும் அதிகார வெறி அன்றிலிருந்து இன்றுவரை கோரத்தாண்டவம் ஆடுவதையும் அதை பெறுவதற்காக மனிதர்கள் போடும் நாடகங்களையும்,ஜாலங்களையும் காணும் போழுது அதிகாரத்தில் அமர்வதுதான் மாபெரும் சாதனை என்றே நம்மில் பலரும் எண்ணலாம்.

ஆனால் உண்மை அதுவல்ல..!

மனிதர்களை அச்சுறுத்தி அடக்கியாளுவதற்கு மட்டுமான  அதிகாரம் இந்த மனித சமூகத்திற்கான சாபம் என்பதாகவே நான் கருதுகின்றேன்.இன்றைய குழந்தைகளுக்கும் வாலிபர்களுக்கும் போலியான மதிப்பை சம்பாரித்து தரும் அடக்குமுறைக்குட்பட்ட அதிகாரத்தில் அமர்வது தான் சாதனை என்பதாக ஊக்குவிப்பது இந்த மனித இனத்தை மீட்ட முடியாத இழப்பில் தள்ளிவிடுவதைப் போன்றே என்றே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் மக்களை அடக்கி ஆட்சி செய்யும் ஒரு அவளமானநிலை எப்படி ஒரு சிறந்த சாதனையாக போற்றப்பட முடியும் என்பதே எனது கேள்வியாகும்?அவ்வாறே மக்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து தன்னை உண்மையாக அற்பனிக்கும் ஒருவனுக்கு முன்னால் இத்தகைய போலியான அதிகாரத்தால் மக்களை அடக்கியாள துடிப்பவன் எப்படி சாதனையாளனாக பார்க்கப்படமுடியும்??அங்கு தான் அதிகாரவர்க்கங்களின் கோர முகம் ஒழிந்திருப்பதாக நான் கருதுகின்றேன்.
ஆம்..!

இந்த மனித சமூகத்தை அடக்கியாள்பவர்களே மக்களில் உயர்ந்தவர்கள் என்றும் சாதனையாளர்கள் என்றும் மரியாதைக்குறியவர்கள் என்றும் ஒரு போலிபிம்பத்தை மக்களை அடக்கியாளத்துடிக்கும் அதிகாரவர்க்கத்தினர் சமூகத்தில் மிக ஆழமாக தோற்றுவித்துவிட்டனர்.இன்னும் சொல்லப்போனால் அதிகாரத்தை வழங்கிய அந்த மக்களே அவர்களை வியந்து காணும் அளவிற்கு அதிகார பீடத்தை போலி மரியாதைகளாலும் சுகபோகங்களாலும் பிரம்மாண்டமாக அலங்கரித்து ஒரு ஏமாற்று வித்தையை உறுவாக்கிவிட்டனர்.

அதுவே இன்று மக்களில் பெரும்பாலோர் அதிகாரத்தில் அமர்வதுதான் சாதனை என்று எண்ணுவதற்கான அடிப்படை காரணியாகவும் அமைந்துவிட்டது என்பதாகவே நான் கருதுகின்றேன்.எனவே என்னைப் பொறுத்தமட்டில் அதிகாரத்தில் அமர்வது என்பது ஒருபோதும் சாதனையல்ல. மாறாக அது வெறுமனே அதிகாரம் செலுத்துவதற்கான இடமாக மட்டும் இருந்தால் அது மக்களுக்கும் அனைவருக்கும் சாபமே என்றே நான் கருதுகின்றேன்.

இங்கு ஒரு முக்கிய அடிப்படையையும் விளக்கவிரும்புகின்றேன்.அதாவது ஆட்சி அதிகாரம் செலுத்தும் இடமானது மக்களின் கஷ்டநஷ்டங்களில் பங்கெடுக்கும் ஒரு பொறுப்பு நிறைந்த இடம் என்பதாக அது பார்க்கப்பட வேண்டுமே தவிர அது தனி மனித புகழைத்தேடும் சாதனைக்கான இடமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.எனவே யார் அதில் அமர்ந்து உண்மையிலேயே மக்களின் கஷ்டநஷ்டங்களில் பங்கெடுத்து உதவி புரிகின்றார்களோ அவர்கள் மக்களால் சிறப்பு மிக்கவர்களாக போற்றப்படுவது எனபது வரவேற்கதக்கதேயாகும்.

ஆனால் இவற்றிற்கு மாறாக வெறுமனே அதிகாரத்தில் அமர்வதை மட்டும் சாதனையாக ஊக்குவிப்பது என்பது இந்த மனித சமூகத்தை இன்னும் இரட்டிப்பான அடக்குமுறைக்கு வழிவகுக்குமே தவிர எவ்வித மனித முன்னேற்றத்தையும் தந்துவிடாது என்பதே எனது கருத்தாகும்.


முடிவுரை:

இந்த உலகில் மனிதர்கள் தங்கள் செயலை ஆக்கப்பூர்வமாக மென்மேலும் செயல்படுத்துவதற்காக ஊக்குவிக்கப்படுவது என்பது ஒரு சிறந்த செயல்தான் என்றாலும் இன்று சாதனை என்ற பெயரில் சுயலாபத்தை மட்டும் நோக்கமாக கொண்ட சிலர் தங்களின் சுயலாபத்திற்காக மட்டும் மனிதர்களை கண்கட்டிய குதிரைகளாக உறுவாக்க விரும்புகின்றனர் என்பதை சுட்டிக்காட்டவே இந்த கட்டுரையை தொகுத்தேன்.

மேலும் இன்று சாதனைகளாக போற்றப்படும் பல்வேறு விஷயங்கள் வெறும் சுயலாபத்திற்கான ஏமாற்று வித்தைகளே என்பதையும் தோலுறித்துக்காட்ட வேண்டும் என்றும் விரும்பினேன்.ஆக வாலிப அண்பர்கள் தங்களின் விலைமதிப்பற்ற ஆற்றலை போலியான சாதனை போதைக்கு அடிமையாக்கிவிடக்கூடாது என்பதே எனது இந்த கட்டுரையின் முக்கிய  நோக்கமாகவும் கொண்டிருக்கின்றேன்.எனவே இதனை முடிந்தளவு என்னுடைய கண்ணோட்டத்தில் நின்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.நிச்சயம் இது உங்களுக்கு பயனலிக்கும் என்றே நான் கருதுகின்றேன்..!

(அடுத்த கட்டுரையில் எது சாதனை?என்பதை இறைவன் நாடினால் விளக்குகின்றேன்.)

நன்றி:

புதன், 22 செப்டம்பர், 2021

உங்கள் மனம் தேவையற்ற தீர்மானம் செய்கிறதா?

முன்னுரை:

இன்றைக்கு மனிதர்களிடம் காணப்படும் குணங்களிலேயே மிக ஆபத்தான குணம் தேவையற்ற தீர்மானம் செய்வதுதான் என்றே நான் கருதுகின்றேன். எந்த அவசியமும் இல்லாத இடங்களிலும் கூட மனிதர்களில் பெரும் பாலானோர் தேவையற்ற தீர்மானங்களை தேடுவதையும், அதில் ஈடுபடுவதையும் காணும்பொழுது எனக்கு மிக பரிதாபமாகவே உள்ளது. அத்தகைய நிலையைக்கொண்ட மூன்று ஜென் துறவிகளின் ஒரு நிகழ்வை இங்கு நான் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகின்றேன்.அது நிச்சயம் நம் போன்ற தேவையற்ற தீர்மானங்களை தேடும் மனிதர்களுக்கு மிக பிரயோஜனம் மிக்கதாக இருக்கும் என்றும் நம்புகின்றேன்.

"மூன்று ஜென் துறவிகள் காலை பொழுதில் எப்பொழுதும் போல் நடை பயிற்சிக்காக அருகில் உள்ள காட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.அப்பொழுது எதார்த்தமாக அந்த காட்டில் இருந்த மலை உச்சியில் தங்கள் முந்தைய ஆசிரியரான ஒரு ஜென் துறவி நிற்பதை மூவரும் காண்கின்றனர்.அவரை கண்டவுடனே மூவரில் ஒருவர் நம் ஆசிரியர் யாரையோ எதிர்பார்த்து நிற்பதை போன்று தெரிகின்றதே என்றார்.
அதனைக்கேட்ட மற்றொருவர் இல்லை!இல்லை.!அவர் எதோ ஒன்றை தொலைத்துவிட்டு மலையின் உச்சியில் நின்று தேடுகின்றார் என்றே நான் நினைக்கின்றேன் என்றார்.

அதனைக் கேட்ட மூன்றாமவரோ இல்லை!இல்லை..!அவர் அங்கு நின்று தியானம் செய்துகொண்டிருக்கின்றார்.ஏனெனில் அவரிடம் எந்த அசைவும் காணப்படவில்லை என்று கூறி முடித்தார்..!இப்பொழுது மூவருக்கும் தங்கள் ஆசிரியர் என்ன செய்துகொண்டிருக்கின்றார் என்பதில் கருத்து வேறுபாடு முத்தியது.வேறு வழியே இன்றி இப்பொழுது ஆசிரியரையே நேராக சென்று சந்தித்து பிரச்சசனையை தீர்ப்பதாக முடிவு செய்யப்பட்டது.

தாங்கள் எதற்கு வந்தார்களோ அவற்றை எல்லாம் மறந்துவிட்டு,மலை உச்சிக்கு சென்றால் தாங்கள் செய்ய வேண்டிய அடுத்த வேலைகளெல்லாம் நின்றுபோகும் என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சிரமத்தோடு மலை உச்சியை அடைந்தார்கள்.அப்பொழுது அரை கண்ணை மட்டும் திறந்த நிலையில் ஆசிரியர் நின்று கொண்டிருப்பதைக்கண்டனர்.ஆனாலும் முதலாமவருக்கோ தன் கருத்துதான் சரி என்று நிறூபிக்கப்பட வேண்டும் என்ற பேராவல் இருந்ததால் அவர் மெல்லமாக ஆசிரியரை அழைத்தார். ஆசிரியரும் என்ன கூறுங்கள் என்றார்.அதற்கு முதலாமவர் ஐயா நீங்கள் இங்கு யாரையோ தேடி வந்திருக்கின்றீர்கள் அப்படித்தானே என்றார்.

அதற்கு துறவியோ எனக்கு இந்த உலகில் யாரும் இல்லையே நான் யாரை தேடப்போகின்றேன் நான் தனியாகவே இந்த உலகிற்கு வந்தேன் தனியாகவே போவேன் என்பதை நான் நன்றாக அறிவேன் எனவே இங்கு நான் யாரையும் தேடவேண்டிய அவசியமில்லையே என்றார்.அதனைக்கேட்ட இரண்டாமவர் தன்னுடைய முடிவுதான் சரியானது என்று எண்ணிக்கொண்டு அப்படியானால் நீங்கள் உங்களுடைய கால் நடைகளில் ஏதோ ஒன்றை தொலைத்து விட்டு மேலிருந்து தேடுகின்றீர்கள் அப்படித்தானே என்றார்.

அதற்கும் துறவி இங்கு என்னுடைய பொருள் என்று எதுவுமே இல்லை என்றிருக்கும் பொழுது நான் எப்படி என்னை விட்டும் தொலைந்த பொருளை தேடுவேன்?எனவே நான் எந்த பொருளையும் தேடவில்லை என்று பதிலளித்தார்.பிறகு மூன்றாமவருக்கோ மிக்கமகிழ்ச்சி ஏனென்றால் ஆசிரியர் தியானத்தில் இருப்பதாக தான் கருதியதுதான் உண்மை என்று எண்ணிக்கொண்டு "அப்படியானால் நீங்கள் இங்கு தியானம் செய்கின்றீகள்தானே என்றார்.

அதற்கு துறவியோ உனக்கு தெரியாதா?தியானம் என்பது எல்லா நிலையிலும் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம் என்று.அதனை நான் நம் மடத்திலேயே செய்துவிட்டேன்.இப்பொழுது நான் ஏதுமற்ற நிலையில் இருக்கின்றேன்.நான் யார் எனக்குள் என்னவெல்லாம் இருக்கின்றது என்பதையெல்லாம் மறந்து ஒரு காலிப்பாத்திரமாக இருக்கின்றேன்.இத்தகைய நிலைதான் புத்தர்களால் போற்றி புகழப்பட்ட நிலை.எனவே இது தியானமும் இல்லை என்றார்.மூவரின் முகமும் வாடிப்போனது.தங்களின் தேவையற்ற தீர்மானங்கள் அனைத்தும் பொய்யாய் போனதை உணர்ந்துகொண்டார்கள்.அப்பொழுது துறவியோ மக்களின் நிலையை முடிவு செய்வதை விடுத்துவிட்டு உங்கள் காரியங்களில் ஈடுபடுங்கள்.அதுதான் உங்களுக்கு தீர்க்கமான தீர்வை தருவதற்கு மிக உகந்தது என்று உபதேசித்து அவர்களை அனுப்பி வைத்தார்.

நீதி:

  • அடுத்தவர்களின் காரியத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.
  • பிறரின் செயலுக்கு வடிவம் கொடுக்காதீர்கள்.
  • நிச்சயமற்ற ஒன்றிற்காக உங்கள் சக்தியை வீணடிக்காதீர்கள்.
  • தேவையற்ற இடங்களில் உங்கள் கருத்தை நிறூபிக்க விரும்பாதீர்கள்.
  • தேவையற்ற விஷயத்தை உங்கள் தோளில் சுமக்காதீர்கள்.
  • உங்கள் காரியத்தில் ஈடுபாட்டுடன் செயல்படுங்கள்.

திங்கள், 20 செப்டம்பர், 2021

வாழ்வில் முன்னேற வேண்டுமா?

வாழ்வில் முன்னேற வேண்டுமா
வாழ்வில் முன்னேற வேண்டுமா

முன்னுரை:

இந்த உலகில் வளர்ச்சிபெற்ற ஒரு நபராக ஆகவேண்டும் என்று விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்படும் இந்த நான்கு விதிகளையும் கடைபிடித்தால் நிச்சயம் தங்கள் வாழ்வில் முன்னேறிவிடமுடியும் என்று நம்புகின்றேன்.எனவே வாசிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் கட்டாயம் கடைபிடித்து வாருங்கள் இது உங்களுக்கு மிக பிரயோஜனமிக்கதாக இருக்கலாம்.

முதல் விதி: 1.குறைவாக பேசுங்கள்.

நீங்கள் முன்னேற வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அதிகம் பேசுவதை நிறுத்தி அதிகம் செயல்படத்தொடங்கிவிடுங்கள்.இதனைத்தான் இங்கு குறைவாக பேசுவது என்று நான் குறிப்பிட விரும்புகின்றேன்.நம்மில் பலரும் பல்வேறு அற்புதத் திட்டங்கள் கொண்டவர்களாகவோ அல்லது அற்புத கருத்துக்கள் கொண்டவர்களாகவோ இருந்துவிடுகின்றோம்.ஆனால் அதனை செயல்படுத்துவதைவிட்டுவிட்டு அல்லது அதனை செயல்படுத்தும் வழியில் பொராடுவதை விட்டுவிட்டு சொற்காளால் மட்டுமே வெள்ளப்போவதாக கூறித்திறிவது மிக குறைமதியாளர்களின் பண்பாகவே நான் காண்கின்றேன்.

ஏனென்றால் முன்னேறிய மேன்மக்கள் தங்கள் திட்டங்களை கூறித்திரிவதை காட்டிலும் செயல்படத்தொடங்கிவிடுகின்றனர் என்பதே வரலாறு நமக்கு கற்றுத்தரும் முக்கிய பாடமாக இருக்கின்றது.எனவே நீங்கள் உங்கள் வாழ்வில் முன்னேற விரும்பினால் குறைவாக பேசுங்கள்.உங்கள் செயலையே உங்களுக்கான வெளிப்பாடாக ஆக்கிக்கொள்ளுங்கள்.

இரண்டாம் விதி: 2.அதிகம் கவனியுங்கள்:

இந்த உலகில் நீங்கள் கவனிக்காமல் எதுஒன்றையும் கற்றுவிட முடியாது என்பதையும் மேலும் உங்களால் கற்காமல் எதிலும் முன்னேற முடியாது என்பதையும் நீங்கள் உணராத வரை உங்களால் ஒருபோதும் முன்னேற முடியாது என்பதை உங்கள் ஆழ்மனதில் எப்படியாவது ஆழப்பதிய செய்துவிடுங்கள்.ஏனெனில் கூர்ந்து கவனித்தல் என்ற பன்பே உங்களை முன்னேற்றத்தின் அடுத்தபடிக்கு அழைத்துச்செல்லும் அற்புத பண்பாக இருக்கின்றது.அவ்வாறே யார் கவனித்தலை விட்டுவிடுகின்றார்களோ அவர்கள்தான் பெரும்பாலும் இந்த உலகில் பலநூறு நலவுகளைவிட்டும் தூரமாக்கப்பட்டும் விடுகின்றனர்.எனவே இந்த உலகில் ஒவ்வொன்றையும் கற்கும் ஆவலோடு உற்றுநோக்குங்கள்.நிச்சயம் உங்களை அது முன்னேற்றத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்லும்.

மூன்றாம் விதி:3.குறைவாக எதிர்வினையாற்றுங்கள்:

உங்களிடம் வரும் எல்லா பிரச்சனைகளுக்கும் உங்களுடைய எதிர்வினையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை என்பதை முதலில் உணர்ந்துகொள்ளுங்கள்.சிறிய சிறிய வியங்களுக்கெல்லாம் நீங்கள் உணர்ச்சி வயப்படக்கூடியவராக இருந்தால் நிச்சயம் உங்களால் முன்னேறவே முடியாது என்பதையும் நன்றாக நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.இந்த உலகம் போட்டி நிறைந்தது.எனவே அது உங்களின் உணர்வுகளை உங்களுக்கு எதிரான ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி உங்களை முன்னேறு வதிலிருந்தும் வெகு தூரத்தில் தள்ளிவிட முயற்சிக்கும்.அச்சமயங்களில் நீங்கள் எதிர்வினை ஆற்றுவதை தவிர்த்துவிட்டு நிதானத்தோடு செயல்படத் தொடங்கிவிடுவீர்களேயானால் நிச்சயம் உங்கள் வாழ்வில் நீங்கள் முன்னேறிவிடலாம்.

 நான்காம் விதி:4.அதிகம் உள்வாங்குங்கள்.

இந்த உலகை உற்று நோக்குவதின் மூலம் நாம் எந்தளவிற்கு உள்வாங்குகின்றோமோ அந்தளவிற்கு நம்மால் சிறப்பாக செயல்பட முடியும்.நம்மில் பலரும் அவசரக்காரர்களாகவும் அல்லது எல்லாம் தெரிந்தவர்களாகவும் நம்மை காட்டிக்கொள்ள விரும்புவதால் பெரும்பாலும் பல்வேறு விஷயங்களை நாம் உள்வாங்க தவறிவிடுகின்றோம்.ஆனால் யார் (Observe)உள்வாங்குதல் என்ற பண்பைக்கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் இந்த உலகில் மகத்தான விஷயங்களையும் வெளிக்கொண்டு வந்துவிடும் ஆற்றல் மிக்கவர்களாக திகழ்வது நிதர்சனமாக இருக்கின்றது.எனவே இந்த உலகை உங்களால் முடிந்தளவு உள்வாங்க கற்றுக்கொள்ளுங்கள்.ஏனெனில் உள்வாங்கும் பண்பே நிச்சயம் உங்களை உயரத்தில் நிறுத்தும்.!

சனி, 18 செப்டம்பர், 2021

வியாபாரத்தின் அடிப்படை தத்துவங்கள் என்ன?

வியாபாரத்தின் அடிப்படை தத்துவங்கள் என்ன
வியாபாரத்தின் அடிப்படை தத்துவங்கள் என்ன

முன்னுரை:

இன்றைய சூழலில் பெரும்பான்மையான பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொருளாதாரம் சம்மந்தமான பாடங்கள் கற்பிக்கப்பட்டாலும் அவைகள் மாணவர்களுக்கு புரியும் வண்ணமோ அல்லது மாணவர்களின் வாழ்வியலோடு கலந்தோ கற்பிக்கப்படுவதில்லை என்பதே வருத்தத்திற்குறிய உண்மையாகும்.இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலான பேராசிரியர்களே வியாபாரத்தின் அடிப்படை கூறுகளை சரியாக புரியாததுதான் அவ்வாறு நடைபெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது என்றும் நான் கருதுகின்றேன்.

எனவே இந்த கட்டுரையில் வியாபாரத்தின் சில தத்துவங்களை சுட்டிக்காட்டுவதின் மூலம் வியாபாரம் என்றால் என்ன என்பதையும் அவைகள் எதனையெல்லாம் அடைப்படையாகக் கொண்டு நடைபெறுகின்றது என்பது போன்ற முக்கிய அடிப்படை விஷயங்களையும் குறிப்பிட்டு இருக்கின்றேன்.இது வியாபரத்தின் அடிப்படையை புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு மிக பிரயோஜனம் மிக்கதாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.

வியாபாரம் என்றால் என்ன?

இதற்கு பொருளாதார கோட்பாட்டு புத்தகங்களில் பல்வேறு பொருள்கள் கூறப்பட்டிருந்தாலும் இயல்பான வியாபார விதியை குறிப்பிடவே நான் விரும்புகின்றேன்.அதாவது."இரு நபர்கள் தங்களின் மனப்பொறுத்தத்துடன் ஒப்புதல் பெற்று தங்களுக்குள் ஒன்றை பரிமாறிக்கொல்வதற்கே இயல்பு வாழ்வில் வியாபாரம் என்று சொல்லப்படுகின்றது."

இங்கு வியாபாரத்தின் முதல் அடிப்படையாக பார்க்கப்படுவது இருவரின் மனப்பொறுத்தம் மட்டுமே என்பதை பொருளாதார வல்லுநர்கள் மிக ஆழமாக வலியுறுத்துகின்றனர்.ஏனெனில் எந்த வியாபாரத்தில் மனப் பொறுத்தமில்லாமல் வற்புறுத்தலின் பெயராலோ அல்லது மிரட்டலின் பெயராலோ கொடுக்கவோ வாங்கவோ செய்யப்பட்டிருக்குமோ அந்த வியாபாரம் செல்லாது என்பதே வியாபாரத்தின் அடிப்படை விதியாகும்.

எப்படி மனப்பொறுத்தமில்லாத வாழ்க்கையை முறித்துக்கொள்வதற்கு கணவன் மனைவி இருவருக்கும் உரிமை இருக்கின்றதோ அதனைப் போன்றே மனப்பொறுத்தமில்லாத வியாபாரத்தை முறித்துக்கொள்ள இருவருக்குமே உரிமை இருக்கின்றது என்பதே இதன் கருத்தாகும்.

வியாபாரம் ஏன் உறுவானது?

இரு மனிதர்கள் தங்களின் வேறுபட்ட தேவையை பரிமாரிக் கொள்வதற்காகவே வியாபாரம் என்ற முறை உறுவானது.இது பண்டைய காலம் தொட்டு இன்றுவரை கடைபிடிக்கப்பட்டும் வருகின்றது.அன்றைய வியாபாரம் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒரு கருவியாக மட்டுமே பார்க்கப்பட்டது.ஆனால் இன்று அந்த வியாபாரம் பல்வேறு பரினாம வளர்ச்சி கண்டு வியாபாரம் இல்லையெனில் மனித வாழ்வு இல்லை என்றளவிற்கு மனித வாழ்வின் அடிப்படை அம்சமாக உறுமாறி இருக்கின்றது.எனவே இங்கு இன்றைய வியாபாரம் எத்தகைய நோக்கங்களுகெல்லாம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பது சம்மந்தமாக அறிந்து வைத்துக்கொள்ள நாம் கட்டாயம் கடமைபட்டிருக்கின்றோம் என்ற அடிப்படையில் ஒரு சில அடிப்படையான விஷயங்களை இங்கு பதிவு செய்கின்றேன்.

இன்றைய வியாபாரத்தின் நோக்கங்கள் யாவை?

1.தனி மனித தேவையை பூர்த்தி செய்தல்.

2.சமூக தேவையை பூர்த்தி செய்தல்.

3.நாட்டின் வளத்தை பெறுக்குதல்.

4.குறிப்பிட்ட நபர்களின் பொருளாதார நிலையை வளர்ச்சியடையச் செய்தல்.

இந்த நான்கு நோக்கங்களே பெரும்பான்மையான வியாபாரத்தில் காணப்படுகின்றது.ஆரம்ப காலங்களில் மனிதர்கள் உற்பத்தியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் நேருக்குநேர் சந்தித்து வியாபாரம் செய்து வந்ததால் பெரும்பாலும் அவர்கள் தங்களுக்குள்ளேயே தங்களின் பொருட்களை பண்டமாற்றம் செய்து தங்களின் வியாபாரத்தை தொடர்ந்தார்கள்.அதன்பிறகே பொருட்களை சந்தைப்படுத்துதல் என்ற வழக்கம் தோன்றியது.அது எப்பது தோன்றியது என்பதை பார்த்துவிடுவோம் வாருங்கள்.

சந்தைப்படுத்தல் முறை எப்படி உறுவானது?

பண்டமாற்றுமுறை கடினமாக இருப்பதை உணர்ந்து அதை எளிமையாக்க ஒரு காலத்தில் கொடுக்கள் வாங்களை சந்தைபடுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.அதாவது தங்களுக்கு தேவையானதை கொடுக்கல் வாங்கள் செய்துகொள்ள (வியாபாரத்திற்கென்று) ஒரு தனி இடத்தை நிர்னயித்து அங்குதான் வியாபாரம் நடக்கும் என்றும்,அங்கு வந்தே மக்கள் விற்கவோ அல்லது வாங்கவோ வேண்டும் என்றும் அங்கு நிர்ணயிக்கப்படுவதுதான் விலை என்றும் பல்வேறு புதிய திட்டங்களை தங்களுக்கு தாங்களே மக்கள் வகுத்துக்கொண்டனர்.

இப்படித்தான் வியாபாரம் என்பது சந்தைபடுத்தல் முறையாகமாறியது.பிறகு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மக்களின் தேவையையும் வியாபாரியின் தேவையையும் பூர்த்தி செய்யும் அந்த இடம் போட்டிக்குள்ளாக்கப்பட்டது.ஒரே பொருளோ அல்லது பலவிதமான பொருளோ பல்வேறு விதங்களில் வியாபார வடிவில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.ஆனால் அவற்றிலும் மக்கள் பல்வேறு சிக்கள்களை சந்தித்தனர்.ஏனென்றால் சில சமயங்களில் மக்களுக்கு பொருளின் தேவை அதிகமாக இருந்தது ஆனால் பொருள் மிக குறைவாக இருந்தது.சிலசமயங்களில் வியாபாரப் பொருட்கள் அதிகமாக இருந்தது ஆனால் மக்களின் தேவை குறைவாக இருந்தது.

இதனை எல்லாம் அனுபவங்களால் புரிந்துகொண்ட அன்றைய பொருளாதார முதலைகள்(Corporates) தான் வெறும் லாப நோக்கை மட்டும் கொண்ட நாங்காவதாக மேலே நான் குறிப்பிட்டிருக்கும் தனிமனித லாபத்தை மட்டும் நோக்கமாக கொண்ட விசித்திரமான வியாபார முறையை உறுவாக்கினார்கள்.அதாவது பொருட்களை எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்ற ஆபத்தான வியாபாரம் செய்யும்முறை என்பது உறுவாக்கப்பட்டது.உண்மையில் இந்த வியாபாரமுறையானது மனித இனத்தை இறுதி கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் ஆபத்தான வியாபாரமுறை என்பதாகவே நான் கருதுகின்றேன்.அத்தகைய வியாபாரமுறை குறித்து அடுத்த கட்டுரையில் பதிவிடுகின்றேன்.
நன்றி:

அவசரம் வேண்டாம்!பொறுமையாக இருங்கள்!

அவசரம் வேண்டாம்!பொறுமையாக இருங்கள்!
அவசரம் வேண்டாம்!பொறுமையாக இருங்கள்!

முன்னுரை:

இந்த உலகில் ஒவ்வொன்றிற்கும் ஒரு நேரம் இருக்கின்றது என்ற உண்மையை பெரும்பான்மையான சமயங்களில் மனிதன் புரிந்துகொள்ள முற்படுவதே இல்லை என்பது மிக பரிதாபத்திற்குறிய விஷயமாகும்.மனிதன் தான் விரும்பிய அல்லது எண்ணிய எதனையும் உடனே அடைந்துவிட வேண்டும் என்ற ஆசை அவனை உயர்ந்த மகத்தான மனித உச்சத்தை அடைவதைவிட்டும் தடுத்துவிடுகின்றது என்றே நான் கருதுகின்றேன்.

மேலும் இந்த உலகில் பொறுமையாக இருந்து,தான் விரும்பியதை அடையாதவர்களைவிட அவசரப்பட்டு எல்லாவற்றையும் தொலைத்தவர்களே அதிகம் என்றே நான் கருதுகின்றேன்.இங்கு பலரும் பொறுமை என்பது பலஹீனத்தின் அல்லது இயலாமையின் வெளிப்பாடு என்று எண்ணிக் கொள்கின்றனர்.ஆனால் அவசரமும் நிதானமின்மையும்தான் மிகப்பெரிய பலஹீனம் என்பதை அவர்கள் உணரத்தவறிவிடுகின்றனர்.

ஆம்..!

யாரிடம் பொறுமையும் நிதானமும் இருக்குமோ அவர் இந்த உலகில் பிரம்மாண்டமான சாம்ராஜ்யத்தை அசைக்க முடியாதளவு உயர்த்தி நிறுத்திவிட முடியும்.ஆனால் யாரிடம் பொறுமையும் நிதானமும் இல்லையோ அவரால் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்ட உறுதிமிகு சாம்ராஜ்யங்களும் கூட  சுக்கு நூறாக்கப்பட்டுவிடும் என்பதே நிதர்சனமாகும்.பலசமயங்களில் ஒரு நிமிட அவசரம் அல்லது நிதானமின்மை நம்மை 100 வருட கைசேதத்திற்கு ஆளாக்கிவிடுகின்றது என்பதே இந்த உலகின் மகத்தான பேருண்மையாக இருக்கின்றது.

இந்த உலகில் நாம் வியப்புடன் பார்க்கும் பல்வேறு சாம்ராஜ்யங்கள் ஏதோ சில நொடிகளில் கட்டமைக்கப்பட்டதல்ல.மாறாக எத்தனையோ யுகங்களின் சகிப்புத்திறனால் உறுவாக்கப்பட்டவையே என்ற பேருண்மையை வரலாற்றை சற்று ஆழமாக உற்றுநோக்கும் சமயம் வெள்ளிடை நீரைப்போல் வெண்மையாக நாம் உணர்ந்து கொள்ளலாம்."அவசரக்காரனுக்கு புத்தி மட்டு"என்ற தமிழ் அடைமொழி மனித உலவியலை மிக அற்புதமாக பேசும் ஒரு தமிழ் சொற்றொடர் என்றே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் அவசரம் என்பது நம்முடைய மனித மதிப்பீடான அறிவை முற்றிலும் மட்டுப்படுத்திவிடுகின்றது என்பதே மகத்தான உண்மையாக இருக்கின்றது. சாலைகளை கடப்பதில் தொடங்கி கடைகளில் பொருள் வாங்கும் வரைக்கும் எதிலும் அவசரம் என்ற நிலையை மனிதன் அடையும்பொழுது அவன் உண்மையில் தனக்குத்தானே மிகப்பெரிய தண்டனையை கொடுத்துக் கொள்கின்றான் என்றே நான் கருதுகின்றேன்.

பிறரை முந்துவதையோ அல்லது தோற்கடிப்பதையோ தனக்கான வெற்றியாக தானே எண்ணிக்கொண்டு தனக்குத்தானே தண்டனை அளித்துக்கொள்ளும் மனிதர்களை காணும் சமயம் உண்மையில் நான் அவர்களுக்காக பரிதாபப்படுகின்றேன்.அவசரம் என்பது நம்முடைய சிறிய அற்பத்தனமான எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்துவிடும் என்றாலும் அது இந்த உலகின் மகத்தான செயலை ஒருபொழுதும் உருவாக்கிவிடாது என்பதை ஒருபோதும் மறுக்கமுடியாது.

எனவே அண்பர்களே.....!

எதெற்கெடுத்தாலும் அவசரம், துரிதம் என்று தயவுகூர்ந்து உங்களுக்கு நீங்களே தண்டனை வழங்கிக்கொள்ள முற்படாதீர்கள்.எதனையும் உணர்ந்து நிதானத்துடன் செயல்படத்தொடங்குவீர்களேயானால் நிச்சயம் உங்கள் வாழ்வை மிக அர்த்தமுள்ளதாக உணரத்தொடங்கிவிடுவீர்கள்.எல்லோரும் அவசரப்படுகின்றனர் என்பதற்காக நீங்களும் உங்களை அதே படுகுழியில் தள்ளிக்கொள்ளாதீர்கள்.உங்களுக்கானதை நீங்கள் முடிவு செய்து பழகிக்கொள்ளுங்கள்.

பிறகு அதில் ஸ்திரமாக நிதானத்துடன் செயல்படுங்கள். நிசயம் இந்த வாழ்க்கை உங்களுக்கு இன்பம் தர வல்லதாக அமைந்துவிடும். இவற்றிற்கு மாறாக அவசரத்தையும் நிதானமின்மையையும் நீங்கள் உங்களுக்காக தேர்ந்தெடுதுக்கொண்டால் நிச்சயமாக உங்களை நீங்களே ஒரு குழிக்குள் புதைத்துக்கொண்டு மண்ணையும் நீங்களே உங்கள் மீது இரைத்துகொண்டிருப்பதைப் போன்றதாகும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.